நடப்பு அரசியல், வரலாறு, சர்ச்சைகள் குறித்து இனி தினமும் வீடியோ மூலம் விளக்கம்.. ராகுல் காந்தி
டெல்லி: நடப்பு அரசியல், வரலாறு மற்றும் சர்ச்சை விவகாரங்கள் குறித்து நாள்தோறும் வீடியோ மூலம் விளக்கம் தர உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.
கொரோனா, சீனா ஊடுருவல் விவகாரம் ஆகியவை தொடர்பாக பிரதமர் மோடி மவுனமாக இருக்கிறார்? ஏன் தேசம் எழுப்புகிற கேள்விகளுக்கு பதில் தருவதில்லை? என்பது ராகுல் காந்தியின் தொடர் விமர்சனம். நாட்டின் முக்கிய பிரச்சனைகளில் மக்களுக்கு வெளிப்படையாக பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என்பது ராகுல் காந்தியின் கருத்து.
அதேபோல் ஊடகங்களும் மத்திய அரசின் நெருக்கடிக்கு பணியாமல் துணிந்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார் ராகுல் காந்தி. அண்மையில் ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி உள்ளிட்டோருடன் சமூக வலைதளங்களில் ராகுல் காந்தி கலந்துரையாடியது பெரும் கவனத்தைப் பெற்றது. கடந்த சிலவாரங்களாக காங்கிரஸ் மூத்த தலைவர்களும் மாணவர்கள் தேர்வு, கொரோனா பிரச்சனை, சீனா விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகள் மூலம் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
மாநிலங்களில் உயர்ஜாதியினரின் 10% இடஒதுக்கீட்டுக்கு சான்றிதழ்கள்-தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்
இதன் தொடர்ச்சியாக ராகுல் காந்தி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், பெரும்பாலான இந்திய செய்தி ஊடகங்களை பாசிசவாதிகள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். செய்தி சேனல்கள், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர். இந்த நிலையில் தற்போதைய அரசியல் பிரச்சனைகள், வரலாறு, சர்ச்சைகள் ஆகியவை தொடர்பான உண்மைகளை நாள்தோறும் வீடியோக்கள் மூலம் விளக்க முடிவு செய்திருக்கிறேன்.
நாளை முதல் முக்கியமான பிரச்சனைகளில் என்னுடைய கருத்துகளை வீடியோக்கள் மூலம் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் என அறிவித்துள்ளார். ராகுல் காந்தியின் இந்த அறிவிப்பு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.