இனி ரயில் நிலையங்களில் 'இதை' பயன்படுத்த முடியாது.. ரயில்வே அமைச்சகம் முக்கிய உத்தரவு
டெல்லி: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை இந்தியாவின் அனைத்து ரயில்நிலையங்களிலும், ரயில்களிலும் வரும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) முதல் பயன்படுத்த முடியாது. இதற்கான உத்தரவை ரயில்வே அமைச்சகம் பிறப்பித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் வரும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி முதல் நாடு முழுவதும் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படும் என அறிவித்தார். பொது மக்கள் அனைவரும் துணிப் பைகளை உபயோகிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த பிரதமர், நாம் பூமி தாயைப் பாதுகாக்க வேண்டும் என்றும் ரசாயன பொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பை அடுத்து ரயில்வே அமைச்சகம் அனைத்து ரயில்வே மண்டலங்கள் மற்றும் கோட்டங்களுக்கும் பிளாஸ்டிக் தடை தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்றை சுற்றறிக்கையாக அனுப்பி உள்ளது.
இதன்படி நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் மற்றும் ரயில்களில் ஒருமுறை பயன்படுத்தி வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு வரும் காந்தி ஜெயந்தி முதல் (அக்டோபர் 2) தடை விதிக்கப்படுகிறது. 50 மைக்ரான் அளவுக்கு குறைவான பாலீதினுக்கு தடை விதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அக்டோபர் 2ம் தேதி முதல் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை என்பது ரயில் நிலையங்களில் மட்டுமல்ல நாடு முழுவதுமே தடை விதிக்கப்படுவதால், ஒருமுறை பயன்படுத்தி எறியும் பிளாஸ்டிக் உற்பத்திக்கும் இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட உள்ளது.