தொடங்கும் ரயில் சேவை.. இ - டிக்கெட் இருந்தால் மட்டுமே ஸ்டேஷனுக்குள் அனுமதி.. அதிரடி கட்டுப்பாடு!
இந்தியா முழுக்க ரயில்களை இயக்குவதற்கும், பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லி: இந்தியா முழுக்க ரயில்களை இயக்குவதற்கும், பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நாடு முழுக்க மொத்தம் 15 நகரங்களுக்கான பயணிகள் ரயில் போக்குவரத்து நாளை முதல் தொடங்கப்பட உள்ளது. சென்னையிலும் நாளை ரயில்வே போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு துவங்கி உள்ளது.
இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பின் வரும் விதிகளை மக்களும் அதிகாரிகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
ரயில் சேவை துவங்கியாச்சு.. அடுத்து விமானங்கள் பாய்ந்து பறக்கப்போகிறது.. ஏற்பாடுகள் ரெடி
எங்கெல்லாம் சேவை
அதில், ரயில்கள் எந்தெந்த பகுதிகளில் இயங்கும், எங்கெல்லாம் நிற்கும் என்பது மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் மூலம் முடிவு செய்யப்படும். கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பகுதியாக ரயில் சேவை கொண்டு வரப்படும். வரும் நாட்களில் இது குறித்த அறிவிப்பு வரும். ரயில் புறப்படும் நேரம், எப்படி புக்கிங் செய்வது, ரயில் நிலையம் உள்ளே எப்படி செல்வது அனைத்தும் ரயில்வேத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படும்.
இ டிக்கெட் அவசியம்
அதே சமயம் இ டிக்கெட் இருந்தால் மட்டுமே பயணிகள் உள்ளே வர முடியும். இ டிக்கெட் இல்லாத யாரும் ரயில் நிலையத்திற்குள் வர முடியாது. பயணிகளின் உதவியாளர்கள் ரயில் நிலையத்திற்குள் வர வேண்டும் என்றாலும், அந்த குறிப்பிட்ட பயணி கண்டிப்பாக இ டிக்கெட் வைத்திருக்க வேண்டும். எல்லா பயணிகளும் கண்டிப்பாக ரயில் நிலையத்தில் சோதனை செய்யப்படுவார்கள்.
ரயில்நிலைய சோதனை
எல்லா பயணிகளும் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதில் அறிகுறி இல்லாத நபர்கள் மட்டுமே ரயிலில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ரயில் நிலையத்திற்குள் நுழையும் போதும் வெளியே செல்லும் போதும் எல்லோருக்கும் கை கழுவ கிருமி நாசினிகள் கொடுக்கப்படும். எல்லோரும் கண்டிப்பாக பயணம் முழுக்க மாஸ்க் அணிந்திருக்க வேண்டியது கட்டாயம்.
சமூக இடைவெளி கண்டிப்பாக
எல்லா மக்களும் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். மக்களுக்கு கொரோனா காலத்தில் பயணம் செய்வது தொடர்பான போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பயணிகள் எந்த மாநிலங்களுக்கு பயணம் செய்கிறார்களோ அங்கு கொரோனா தொடர்பாக விதிக்கப்பட்டு இருக்கும் விதிமுறைகள், அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும், என்று அதில் கூறப்பட்டுள்ளது.