ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை 5 மடங்கு அதிகரிப்பு.. ஆடிப்போன பயணிகள்!
டெல்லி: சில ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விலை 50 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது பயணிகளுடன் ரயில் நிலையம் செல்வோருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா காலத்திற்கு பிறகு இயக்கப்படும் ரயில்கள், சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்படுகின்றன. வழக்கமான வழித்தடத்திற்கு முன்பைவிட இப்போது அதிகமாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முதியோர் கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் நீக்கப்பட்டு விட்டன. கேட்டால் அதிகம் பேர் பயணிக்கக் கூடாது என்பதால் கட்டணத்தை ஏற்றி விட்டோம் என்று காரணம் சொல்கிறது ரயில்வே துறை.
ரூ.50 கட்டணம்
இது ஒரு பக்கம் என்றால் பல ரயில் நிலையங்களில் ரயில் ஏற்றிவிட வருவோர் வாங்கக்கூடிய பிளாட்பார்ம் டிக்கெட் ரேட் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்பு பத்து ரூபாய் என்று இருந்த இந்த டிக்கெட் விலை 50 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணத்தில் ரயிலில் கூட பயணித்து விடலாம் ஆனால் ஏற்றிவிட வருவோருக்கு இவ்வளவு பெரிய சுமை தேவையா என்ற கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
முக்கிய ரயில் நிலையங்கள்
மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினல், தாதர் டெர்மினல் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களிலும் இதுபோல பிளாட்பாரம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கும் கொரோனாவை காரணம் காட்டி உள்ளது ரயில்வேத்துறை. மும்பை டிவிஷனில் உள்ள 7 ரயில் நிலையங்களில் இப்படி கட்டணம் கூட்டப்பட்டுள்ளது.
கூட்டத்தை குறைக்கிறார்களாம்
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அதிக மக்கள் கூட்டம் கூடும் சில ரயில் நிலையங்களில் மட்டுமே தற்காலிகமாக பிளாட்பார்ம் சீட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட குறுகிய கால நடவடிக்கையாக இது முன்பும் கையாளப்பட்ட யுக்திதான்.
பொது மக்கள் நலன் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ரயில்வே கூறியுள்ளது.
வசூல் வேட்டை
2020ம் ஆண்டு மார்ச் மாதம், ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்பட்டது. பின்னர் இது விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகைகளின் போதும் இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் ரயில் நிலைய பிளாட்பார்ம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.