அன்று கேஸ் மானியம்.. இன்று ரயில் டிக்கெட் மானியம்.. பயணிகளாகவே மானியத்தை விட்டு தர புதிய நடைமுறை
டெல்லி: ரயில் கட்டணங்களில் வழங்கப்படும் மானியத்தை பயணிகள் தாமாக முன் வந்து விட்டு கொடுக்கும் நடைமுறையை கொண்டு வர மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக ஆட்சியில் முதல் 100 நாட்களுக்கு செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் குறித்த அறிக்கையை ரயில்வே துறை மத்தியட அரசுக்கு சமர்ப்பித்துள்ளது. அதில் சமையல் எரிவாயு சிலிண்டர் மானியத்தை பயனாளிகள் தாமாக முன் வந்து விட்டுத் தரும் திட்டத்தை போல் ரயில்வே துறையிலும் செயல்படுத்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளுக்கு ஆகும் செலவில் 53 சதவீதம் மட்டுமே அவர்களிடம் இருந்து பெறப்படுகிறது. மீதமுள்ள 47 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. இது போன்ற மானியத் திட்டத்தால் ரயில்வே பெரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
நடைமுறை
இதனால் சமையல் கேஸ் சிலிண்டருக்கான மானியத்தை விட்டு கொடுப்பது போல் ரயில்வேக்கான நிதி நெருக்கடியையும் விட்டுக் கொடுக்க பரிந்துரை செய்யப்பட்டு அது ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மானியத் தொகை
இந்த யோசனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் எழுப்பிய நிலையில் அது தொடர்பாக கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அது ஏற்கப்படவில்லை. இந்த நடைமுறையில் பயணிகள் டிக்கெட்டை வாங்கும் போதே அதற்கான மானியத் தொகையை விட்டுக் கொடுப்பதா இல்லை வேண்டாமா என்பதை தீர்மானித்து கொள்ளலாம்.
ரயில்வே துறை
இதன் மூலம் ரயில்வே நிர்வாகம் வரும் 2019-2020 நிதியாண்டில் ரூ. 56 ஆயிரம் கோடி வருமானத்தை எட்டி விடும் என நம்பப்படுகிறது. பயணிகள் டிக்கெட் மீதான மானியத்தை விட்டுக் கொடுக்கக் கோரி பல்வேறு விளம்பரங்களை ரயில்வே துறை செய்து வருகிறது.
மத்திய அரசு
கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியை பிடித்த பிரதமர் மோடி கேட்டு கொண்டதற்கிணங்க 1.25 கோடிக்கு மேலான மக்கள் தங்கள் மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். அது போல் ஒரு வெற்றியை ரயில்வே துறையிலும் மக்கள் வாரி வழங்க வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது.