சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தில் 85% ரயில்வே செலுத்தும்: பாஜக
டெல்லி: கொரோனா பரவுவதைத் தடுக்க நீட்டிக்கப்பட்டுள்ள லாக்டவுனால் சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களுக்கான பயண கட்டணத்தில் ரயில்வே நிர்வாகம் 85% ; மாநில அரசு 15% செலுத்தும் என்று பாரதிய ஜனதா கட்சி விளக்கம் அளித்திருக்கிறது.
லாக்டவுன் நீட்டிப்பை தொடர்ந்து மாநில அரசுகளின் வேண்டுகோளை ஏற்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனிநபர் இடைவெளியுடன் பயணிகள் அமரவைக்கப்பட்டு இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன.
பயண கட்டணம்- சோனியா
ஆனால் இந்த ரயில்களில் தொழிலாளர்களிடம் கட்டணம் பெறப்படுவதாக ஒரு சர்ச்சை எழுந்தது. இதனை முன்வைத்து மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட அறிக்கையில், ரயிலில் செல்லும் தொழிலாளர்களுக்கான கட்டணத்தை அந்தந்த மாநில காங்கிரஸ் கமிட்டிகள் ஏற்கும் என அறிவித்தார்.
மத்திய அரசு மீது பிரியங்கா விமர்சனம்
இதனடிப்படையில் தமிழகம், கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சார்பில் நிதி ஒதுக்கீடும் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமது ட்விட்டர் பதிவில், அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் நிகழ்ச்சிக்காக ரூ100 கோடி செலவிடுகிறது மத்திய அரசு. கூலி தொழிலாளர்களுக்கு செலவிட முடியாதா? என கேள்வி எழுப்பியிருந்தார்.
ட்விட்டரில் ராகுல் சாடல்
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் இதேபோல் தமது ட்விட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்திருந்தார். பாஜகவின் ராஜ்யசபா எம்பியான சுப்பிரமணியன் சுவாமியும் இது தொடர்பாக ட்விட்டர் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பிட் பட்ரா தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு விளக்கம் தந்துள்ளார்.
பாஜக தரப்பு விளக்கம்
லாக்டவுன் தளர்வுகளின் போது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களில், தொழிலாளர்களை அழைத்து செல்லும் ரயில்களுக்கு பயண சீட்டு எங்கும் விற்பனை செய்யப்படமாட்டாது. ரயில்வே நிர்வாகம் 85% மானியத்துடனும் மாநில அரசின் 15% பங்குடனும் இந்த கட்டணம் பகிர்ந்து கொள்ளப்படும் என தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் மத்திய பிரதேச பாஜக அரசு பணம் செலுத்தியுள்ளது. இதேபோல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களும் பின்பற்றலாம் என குறிப்பிட்டிருக்கிறார்.