'ஷாக்..' குழந்தை திருமணத்தை ஆதரிக்கும் சட்டம்.. ராஜஸ்தானில் நடக்கும் காங்கிரஸ் vs பாஜக அரசியல்
டெல்லி: குழந்தை திருமணங்களைப் பதிவு செய்ய வழிவகை செய்யும் புதிய மசோதாவை ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு கொண்டு வந்துள்ளது. ஆனால் இந்தச் சட்டம் குழந்தை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
உலகமே டிஜிட்டல் மயமாகி உள்ள நிலையிலும், பல பிற்போக்குத்தனமான மூடநம்பிக்கைகள் இன்றளவும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள், நரபலி சம்பவங்கள், ஆணவக் கொலைகள் ஆகியவை நடந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், இம்மாதிரியான நடவடிக்கைகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஆப்கானில் அமைதி திரும்ப வேண்டும்.. டெல்லி பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட பிரிக்ஸ்.. மாநாட்டில் முடிவு
ராஜஸ்தான் அரசு
இந்நிலையில், குழந்தை திருமணத்தை அங்கீகரிக்கும் வகையில் ஒரு சட்டத் திருத்தம் ராஜஸ்தான் அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கிடையே அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ராஜஸ்தான் கட்டாய பதிவு திருமண திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராஜஸ்தான் சட்டப்பேரவையில் பாஜக வெளிநடப்பு நடத்திய நிலையில், குரல் வாக்கெடுப்பின் மூலம் 2009 சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சட்டத் திருத்தம்
இதன் மூலம், சிறு வயதில் திருமணம் செய்து கொண்ட தம்பதிகள், தங்கள் வாழும் பகுதியிலுள்ள பதிவுத் திருமண அலுவலகத்தில், தங்களின் திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். 21 வயது பூர்த்தி செய்யாத ஆணுக்கும் 18 வயது பூர்த்தி செய்யாத பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தை அவர்களின் பெற்றோர்களோ அல்லது காடியனோ திருமணம் நடைபெற்று 30 நாட்களுக்குள் பதிவு செய்து கொள்ளலாம் எனச் சட்டத் திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக எதிர்ப்பு
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாப் சந்த் கட்டாரியா, "இந்த சட்டம் தவறானது என நான் நினைக்கிறேன். இந்த சட்டத்தை நிறைவேற்றியவர்கள் அதைப் பார்க்கவில்லை. அமலில் உள்ள குழந்தைத் திருமண சட்டத்திற்கு எதிராக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாவின் எட்டாவது பிரிவு உள்ளது" என்றார்.
காங்கிரஸ் விளக்கம்
விமர்சனங்களுக்கு விளக்கமளித்துள்ள சட்டப்பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் சாந்தி குமார் தரிவாள், "குழந்தை திருமணம் சட்டப்பூர்வமாக்கப் படுகிறது என இச்சட்டத்தில் சொல்லவில்லை. திருமணத்திற்குப் பிறகு பதிவு செய்வது அவசியமாகிறது என்றே சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் விரும்பும் பட்சத்தில் குழந்தை திருமணத்திற்கு எதிராக அவர் நடவடிக்கை எடுக்கலாம். மாவட்ட பதிவுத் திருமண அலுவலர், கூடுதல் மாவட்ட பதிவு திருமண அலுவலர், பிளாக் பதிவுத் திருமண அலுவலர் ஆகியோரின் நிலையிலேயே திருமணத்தைப் பதிவு செய்து கொள்ளலாம். பொதுமக்கள் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வது எளிதாகப் பட்டுள்ளது" என்றார்.
விழிப்புணர்வு தேவை
முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்ட சதி, தேவதாசி போன்ற பிற்போக்கான நடைமுறைகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாலும் முறையான சட்டங்களாலும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் குழந்தை திருமணம் தொடர்ந்து நடைபெற்று வந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்துள்ளதாக யுனிசெஃப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய சூழலில் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவுமே நடவடிக்கைகள் தேவை. ஆனால், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு இயற்றியுள்ள இந்த சட்டம் குழந்தை திருமணங்களை ஊக்குவிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக துறைசார்ந்த வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.