சச்சினின் 3 கோரிக்கைகள்...ராகுலுடன் சந்திப்பு...முடிவுக்கு வருகிறது ராஜஸ்தான் சிக்கல்!!
டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் எதிர்கால முதல்வர் என்று தன்னை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் அல்லது துணை முதல்வர் பதவியை தனது ஆதரவாளர்கள் இருவருக்கு வழங்க வேண்டும் உள்பட மூன்று கோரிக்கைகளை ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநில துணை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு இருக்கும் சச்சின் பைலட், கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை இன்று சந்தித்துப் பேசி உள்ளார். இவர்களது சந்திப்பின் மூலம் ராஜஸ்தான் காங்கிரசில் நிலவி வந்த கோஷ்டி பூசல் முடிவுக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் அரசியலில் திடீர் மாற்றம்...14ல் நம்பிக்கை வாக்கெடுப்பு...சச்சின் ராகுல் இன்று சந்திப்பு!!
டெல்லியில் முகாம்
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். துணை முதல்வராக சச்சின் பைலட் இருந்தார். இவர்களுக்கு இடையே ஏற்பட்ட புகைச்சல் காரணமாக தனது ஆதரவாளர்களுடன் சச்சின் வெளியேறினார். டெல்லியில் முகாமிட்டார். இவரை தவறாக பாஜகதான் வழி நடத்துகிறது என்று அசோக் கெலாட் குற்றம்சாட்டி இருந்தார்.
பொறுப்பில் இருந்து நீக்கம்
இவரிடம் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சமாதானம் பேசினர். கட்சிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். ஆனால், சச்சின் ஏற்றுக் கொள்ளவில்லை, சட்டப்பேரவை கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இதனால் இவருக்கும், இவரது ஆதரவாளர்கள் 18 பேருக்கும் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார். துணை முதல்வர் பொறுப்பில் இருந்து சச்சின் நீக்கம் செய்யப்பட்டார். இவரது ஆதரவாளர்களும் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
|
பிரியங்கா காந்தி
இந்த நிலையில் இன்று ராகுல் காந்தியை சந்திக்க சச்சின் பைலட் நேரம் கேட்டு இருந்ததாகவும், ராகுல் காந்தி ஒதுக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று இவர்களது சந்திப்பு நடந்தது. உடன் பிரியங்காவும் இருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி வேணுகோபாலை சந்தித்து நேரம் ஒதுக்குமாறு சச்சின் கேட்டதாகவும், இதன்படி அவர் நேரம் ஒதுக்கியதாகவும் கூறப்படுகிறது.
துணை முதல்வர் பதவி
சந்திப்புக்கு முன்னதாக மூன்று கோரிக்கைகளை சச்சின் பைலட் வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவை, எதிர்கால முதல்வர் சச்சின் பைலட் என்று அதிகாரபூர்வமாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
- இல்லையென்றால், தனது ஆதரவாளர்களில் மூத்த தலைவர்களில் இருவரை துணை முதல்வர்களாக்க வேண்டும். மற்றவர்களுக்கு அமைச்சர் பதவி, போர்டு டிரஸ்ட் பொறுப்பு, கார்பரேஷனில் பொறுப்பு வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் பொதுச் செயலாளராக சச்சினுக்கு பதவி வழங்க வேண்டும்.
- இந்த அறிவிப்புகளை காங்கிரஸ் அறிக்கையில் ராகுல் காந்தி அறிவிக்க வேண்டும் என்று மூன்று கோரிக்கைகளை வைத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனிக்கமிட்டி
மீண்டும் துணை முதல்வர் பதவி பொறுப்பை சச்சின் ஏற்க வேண்டும் என்று ராகுல் காந்தி கேட்டுக் கொண்டதாகவும். அவ்வாறு ஏற்றுக் கொண்டால், அரசு நிர்வாகம் எந்த சிக்கலும் இல்லாமல் கொண்டு செல்வதற்கு தனிக் கமிட்டி அமைக்கப்படும் என்று கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சச்சின் ஆதரவாளர்களுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக ராகுல் காந்தி கூறியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று அவர்களது சந்திப்பு நடந்தது.
நம்பிக்கை வாக்கெடுப்பு
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி சட்டசபை கூடுகிறது. அப்போது நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களும் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருப்பதாக காங்கிரஸ் செயல் கமிட்டி உறுப்பினர் ரகுவீர் மீனா தெரிவித்துள்ளார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை ஏற்றுக் கொள்வேன் என்று முதல்வர் அசோக் கெலாட்டும் தெரிவித்துள்ளார்.