ராஜஸ்தானில் உச்சகட்ட குழப்பம்...பாஜகவின் ஊதுகுழல் மாயாவதி...பிரியங்கா காந்தி விளாசல்!!
டெல்லி: ''பாஜகவின் அறிவிக்கப்படாத ஊதுகுழலாக மாயாவதி இருந்து வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தை சீர்குலைக்க வருபவர்களுக்கு மாயாவதி துணை நிற்கிறார்'' என்று அவரது பெயரைக் குறிப்பிடாமல் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று சாடியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பின்போது வாக்களிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் விப் (கொறடா) உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று மாயாவதி இன்று கூறியுள்ளார்.
சபாஷ்.. கோவை ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகள் கல்விச் செலவை ஏற்ற தனுஷ் ரசிகர்கள்
வழக்கு தள்ளுபடி
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.,க்களை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டனர். இவர்கள் அனைவரும் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இதை எதிர்த்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த ஆறு எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரப்பட்டு இருந்தது. ஆனால், இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
காங்கிரசுக்கு பாடம்
ராஜஸ்தான் அரசியல் குளறுபடி உச்சத்தை எட்டி இருக்கும் நிலையில், இன்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி செய்தியாளர்களை சந்தித்தபோது, ''மோசடி செய்து எங்களது எம்.எல்.ஏ.களை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்துக் கொண்டனர். இதுதொடர்பாக ஏற்கனவே வழக்கு தொடுத்து இருந்தோம். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடருவோம். இதன் மூலம் அசோக் கெலாட் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவோம்.
கட்சியில் இருந்து நீக்கப்படுவர்
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறோம். அவ்வாறு அவர்கள் செய்யாதபட்சத்தில் அவர்களை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவோம்.
நிபந்தனையற்ற ஆதரவு
ராஜஸ்தான் தேர்தல் முடிந்த பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ.க்கள் நிபந்தனையற்ற ஆதரவை காங்கிரசுக்கு அளித்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக அரசியலமைப்புச் சட்டத்துக்கு மாறாக அந்த ஆறு பேரையும் தனது கட்சியுடன் அசோக் கெலாட் இணைத்துக் கொண்டார். இதேபோன்று தான் அவரது முந்தைய ஆட்சியிலும் கெலாட் நடந்து கொண்டார்.
யோகிக்கு மாயாவதி கேள்வி
தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. எங்களிடம் இருந்து முதல்வர் யோகி ஆதித்யநாத் கற்றுக் கொள்ள வேண்டும். நான் நான்கு முறை மாநிலத்தில் ஆட்சி செய்து இருக்கிறேன். அப்போது சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது'' என்றார்.
ராஜஸ்தான் விஷயத்தில் தற்போது மாயாவதி, பிரியங்கா காந்தி இடையே மோதல் முற்றியுள்ளது. இதற்கு முன்பும், மாயாவதியை பாஜகவின் ஊதுகுழல் என்று பிரியங்கா விமர்சித்து இருந்தார்.