சச்சின் பைலட் கோஷ்டி மீது தகுதி நீக்க நடவடிக்கை- ராஜஸ்தான் சபாநாயகர் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் மனு
டெல்லி: சச்சின் பைலட் உள்ளிட்ட 18 அதிருப்தி எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சபாநாயகர் சி.பி. ஜோஷி மேல்முறையீடு செய்துள்ளார்.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். அவருக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்களும் கலகக் குரல் எழுப்பினர். ஆனால் சச்சின் பைலட் கோஷ்டியால் எதையும் சாதிக்க முடியவில்லை.
சச்சின் பைலட், அவரது ஆதரவு அமைச்சர்கள் இருவர் பதவி பறிக்கப்பட்டது. அத்துடன் சச்சின் பைலட் உள்ளிட்ட 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்க செய்வது என சபாநாயகர் ஜோஷி முடிவு செய்தார். இது தொடர்பாக அனைவருக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸும் அனுப்பினார்.
ஆனால் இந்த விளக்க நோட்டீஸுக்கு எதிராக பைலட் கோஷ்டி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் வரும் 24-ந் தேதி வரை பைலட் கோஷ்டி மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என சபாநாயகருக்கு இடைக்கால தடை விதித்தது.
சச்சின் பைலட், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மீது சபாநாயகர் ஜூலை 24 வரை நடவடிக்கை எடுக்க ஹைகோர்ட் தடை
இந்த தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜஸ்தான் சபாநாயகர் ஜோஷி மேல்முறையீடு செய்துள்ளார். சபாநாயர் ஜோஷியின் சார்பாக மூத்த வழக்கறிஞரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான கபில்சிபல் ஆஜராகி இம்மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் சச்சின் பைலட் ஒரு கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். சபாநாயகரின் மேல்முறையீட்டு மனுவைத் தொடர்ந்து இந்த கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளார் பைலட்.