ராஜஸ்தான் நாடகம்...பாஜக கையில் சச்சின் ஆதரவாளர்கள்... இன்று பெங்களூரு பயணம்!!
டெல்லி: அரியானாவில் மானேஸ்வர் ஓட்டலில் தங்கி இருக்கும் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 18 பேர் இன்று சார்டட் விமானத்தில் பெங்களூருக்கு பறக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. பாஜக கையில் சச்சினும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தை ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்டு துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் அந்த பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் நீக்கம் செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் நீக்கம் செய்யப்பட்டனர்.
முதல்வர் அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே சமரம் செய்ய டெல்லி தலைவர்கள் முயற்சித்தனர். சச்சின் பைலட் எதற்கும் ஒத்துவராத காரணத்தினாலும், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத காரணத்தினாலும், சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.
இதையடுத்து அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அதே மானேசர் ஓட்டலில் தங்கி வருகிறார். இந்த ஓட்டலுக்குள் நேற்று இரவு ராஜஸ்தான் போலீசார் நுழைய முயற்சித்தனர். இவர்களை அந்த மாநிலத்தின் பாஜகவினர் நுழைய விடாமல் தடுத்தனர். ஓட்டலுக்குள் சென்ற சில நிமிடங்களில் போலீஸ் வாகனம் வெளியேறியது.
ஆடியோ விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரி லால் சர்மாவிடம் விசாரணை மேற்கொள்ள போலீசார் சென்று இருந்தனர். ஆனால், பன்வாரிலால் அங்கு இல்லை என்று கூறி அனுப்பிவிட்டனர்.
சோனியாவை சந்திக்க பிரியங்காவிடம் ஒற்றை கண்டிஷன் போட்ட சச்சின் பைலட்.. இன்று உள்ளதும் போச்சு நிலை!
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதற்காக பேரம் நடந்தது என்று கூறப்படும் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட பன்வாரிலால் சர்மா மற்றும் விஷ்வேந்திர சிங் இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், பாஜக தரப்பில் இருந்து வெளியாகி இருக்கும் செய்தியில், சச்சின் உள்பட அவரது எம்.எல்.ஏ.க்கள் மத்தியப்பிரதேசம் அல்லது அரியானாவிலேயே தங்க வைக்கப்படுவர்கள் என்று கூறப்படுகிறது. சச்சின் பைலட்டால் தற்போது நிலைமையை சமாளிக்க முடியாமல் இருப்பதாலும், ராஜஸ்தான் பாஜகவில் அவருக்கு எதிர்ப்பு பெருகுவதாலும், பாஜக தற்போது சச்சின் கேம்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்று கூறப்படுகிறது.
ஆடியோ விவகாரம்:
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்ப்பதற்கு பேரம் பேசியதாகவும் அதுதொடர்பான இரண்டு ஆடியோக்களை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா நேற்று வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோவில் பேசி இருப்பது பாஜக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், சஞ்சய் ஜெயின், காங்கிரஸ் எம்.எல்.ஏ. பன்வாரி லால் சர்மா என்று ரந்தீப் சிங் குற்றம்சாட்டி இருந்தார்.