பாயும்புலி கை காட்டும் "அண்ணாமலை" யாரோ.. தேடிவந்து பார்க்கும் தலைவர்கள்.. ரஜினியின் "முதல்வர்" யார்?
ரஜினிகாந்த் அறிவிக்க போகும் முதல்வர் வேட்பாளர் யார்?
சென்னை: புலி ஒன்று பாய போகிறது.. அது அரசியல் களத்தில் புகுந்து பிரித்து மேய உள்ளது என்றுதான் ரஜினியின் அரசியலை குறிப்பிட வேண்டி உள்ளது.. அதற்கான நேரமும் நெருங்கி வருவதாகவே தெரிகிறது. ரஜினிகாந்த் மனதில் நினைத்துள்ள "முதல்வர் வேட்பாளர்" யார்?
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்று தெரிந்துவிட்டது.. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு சற்று வேகம் எடுத்துள்ளார் ரஜினி. அந்த சந்திப்பின்போது நடந்த அந்த ஏமாற்றத்துக்கு இன்னும் நமக்கு விடை கிடைக்காத நிலையில், அடுத்தடுத்த வேலைகளில் இறங்கிவிட்டார்.
நேற்று முன்தினம் தமிழருவி மணியன் அந்த ஏமாற்றம் என்னவென்று சொல்வதற்காகவே ஒரு கூட்டத்தை நடத்தினார்.. அதில் விலாவரியாக ரஜினியின் அருமை பெருமைகளை எடுத்து சொல்லி, அவர்தான் முதல்வராகவே வரவேண்டும் என்ற முக்கிய பாயிண்டையும் எடுத்து வைத்தார். கிட்டத்தட்ட தமிழருவி மணியன் பேசியது ஒரு மினி பிரச்சாரம் போலவே இருந்தது!
அனுமானம்
இதையடுத்துதான் நேற்று செ.கு.தமிழரசன் சென்று சந்தித்தார்.. சாதி ரீதியான கட்சிகளுக்கு குறி வைத்து வாக்கு அள்ள ரஜினிகாந்த் தரப்பு முயற்சித்து வரும் நிலையில் தமிழரசனும் சென்று சந்தித்தது அனுமானத்தை உறுதி செய்தது. இதற்கு பிறகு இன்று காலை திருநாவுக்கரசர் சென்று ரஜினியை சந்தித்தார்.. திருநாவுக்கரசை பொறுத்தவரை, ரஜினிகாந்த்துக்கு மிக நெருக்கம்.. கராத்தே தியாகராஜன் போலவே திருநாவுக்கரசு மீதும் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் ரஜினிகாந்த்.. அடிக்கடி ரஜினியின் வீட்டுக்கு சென்று நட்பை பலப்படுத்தி வருபவரும் கூட.
திருநாவுக்கரசு
இதை பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது, "என் பேரனுக்கு பிறந்த நாள்.. வாழ்த்து பெற குடும்பத்துடன் வந்தேன்.. அது எப்படி அரசியல் பேசாமல் இருப்போம்.. நிச்சயம் நாங்கள் அரசியல் பேசினோம்.. இப்போ இருக்கிற அரசியல் சூழல், அடுத்து என்ன நடக்க போகிறது இதெல்லாம் பேசினோம்.. ஆனால் அவர் கட்சி ஆரம்பிப்பது பற்றி என்கிட்ட ஆலோசனை பெற வேண்டியது இல்லை.. அவருக்கு யாருடைய அட்வைசும் தேவையில்லை" என்று லேசாக பொடி வைத்து பேசிவிட்டு சென்றார்.
ராதாரவி
இதற்கு பிறகுதான் ட்விஸ்ட்டே.. திடீரென ராதாரவி ரஜினிகாந்த் வீட்டுக்கு சென்றதுதான்.. ராதாரவி போகாத கட்சியே இல்லை.. எல்லாவற்றிலும் ஒரு ரவுண்டு அடித்துவிட்டு வந்தவர்.. தற்போதைக்கு பாஜகவில் பால் காய்ச்சி குடியேறியுள்ளார். திமுகவில் இருந்து நீக்கப்பட்டதையடுத்து பாஜகவில் இணைந்தவர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசியது கவனிக்கத்தக்கது. பாஜகவில் இணைந்து ராதாரவி இவ்வளவு நாள் ஆகியும், இன்றைய தினம்தான் ரஜினியை வந்து சந்திப்பதால் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி விட்டுள்ளார்.
குருமூர்த்தி
ரஜினிகாந்த்தை பொறுத்தவரை இன்னொரு விஷயத்தை நாம் உற்றுநோக்கினால், அவரை சந்தித்து பேசி வருபவர்கள் யாருமே புதுமுகம் இல்லை.. எல்லாருமே ரஜினியுடன் நீண்ட காலமாக தொடர்பில் இருந்து வருபவர்கள்.. குருமூர்த்தி, பாஜக நாராயணன், அர்ஜுன் சம்பத், திருநாவுக்கரசர், செகு தமிழரசன், ராதாரவி என யாரையுமே ஏன் சந்தித்து பேச வேண்டும் என நம்மால் துளியளவு கூட கேள்வி எழுப்ப முடியாது.. நமக்கு அதற்கான உரிமையும் கிடையாது. ஆனால் இவர்களிடம்தான் அரசியல் தொடர்பான ஆலோசனைகளும் நடத்துகிறார்.. அந்த வகையில், அந்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் ரஜினிகாந்த் மட்டும் தெளிவாக, உறுதியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
பிடிவாதம்
கட்சி ஆரம்பிப்பது உறுதிதான்.. அந்த கட்சி ரஜினியின் கட்டுப்பாட்டில் இருக்கும்.. ஆனால் தான் முதல்வராக இருக்க மாட்டேன் என்பதில் ரஜினிகாந்த் பிடிவாதமாக இருந்து வருகிறார். அப்படியானால் அவரது மனதில் யாரையோ முதல்வர் வேட்பாளராக தீர்மானித்தும் வைத்துள்ளதாகவே தெரிகிறது. முதலில் மன்ற நிர்வாகிகளிடம் இதை தெரிவிக்கும்போது, அவர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியையே தந்தது.. ஆனாலும் அவர்களுக்கு சில விஷயங்களை புரிய வைத்துள்ளார் ரஜினிகாந்த்.. இதையடுத்தே அடுத்த அரசியல் கட்சி தலைவர்களை சந்திக்கும் முயற்சியலும் ஈடுபட்டு வருகிறார்.
அண்ணாமலை?
ரஜினிகாந்தின் ஒவ்வொரு செயலும், நகர்த்தி வரும் அரசியல் காய்களும் சரியாகவே உள்ளதாக பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர்.. ரஜினிகாந்த முடிவு செய்துள்ள அந்த முதல்வர் வேட்பாளர் குறித்து, அவரை சந்தித்து பேசிய தலைவர்களும் கிட்டத்தட்ட ஓகே சொல்லிவிட்டதாகவும் தெரிகிறது.. இது ரஜினிக்கு திருப்தியையும் ஏற்படுத்தி உள்ளதாம்.. கூடிய சீக்கிரம் அந்த தகவலை அதாவது ரஜினி மனசில் உள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவும் போகிறாராம்.
கட்சி தலைவர்
கர்நாடகாவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரி அண்ணாமலை சமீபத்தில் ராஜினாமா செய்தார்... அவரைத்தான் முதல்வர் வேட்பாளராக ரஜினிகாந்த் அறிவிக்கப் போவதாக ஏற்கனவே தகவல் ஒன்று வந்த நிலையில் அது அப்படியே முடங்கி போய்விட்டது... இப்போது விஷயம் இதுதான்.. "கட்சி தலைவர் மட்டும்தான் ரஜினிகாந்த்.. முதல்வர் வேட்பாளர் தான் கிடையாது.. தனக்கு அப்படி பதவி ஆசை இல்லை" என்பதைதான் மா.செ.க்களிடம் மட்டுமல்ல... செய்தியாளர்களிடமும் விரைவில் தெரிவிக்க போகிறாராம்... இந்த செய்தியாளர்கள் சந்திப்பும் பெரிய அளவில் நடத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறதாம்.
யார் அவர்?
அநேகமாக அந்த நிகழ்வுதான் தமிழக அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்க கூடியதாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.. "ஏமாற்றம்" என்று சொல்லிவிட்டு போனதில் இருந்தே அது என்னவாக இருக்கும் குழம்பிய நிலையில், இப்போது இந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற அடுத்த குழப்பத்திலும் இறங்கி விட்டனர் நம் மக்கள்!!! யார் அவர்? ஒருவேளை அவரா? அல்லது இவரா? அல்லது "ராகவேந்திரா" கையை காட்டுவது "ஆண்டவரா.. "அண்ணாமலை"யாரா?!