பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவாரா? உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை
டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன், தம்மை விடுதலை செய்ய கோரும் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை இறுதி விசாரணை நடத்துகிறது.
பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு 2018-ல் முடிவெடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இதன் மீது 3 ஆண்டுகாலமாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்து வருகிறார்.
ராஜீவ் வழக்கு: 7 தமிழரை ஏன் விடுதலை செய்ய வேண்டும்? ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தில் ஸ்டாலின் விளக்கம்
ஆளுநர் தரப்பு பதில்
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் அதிகாரத்தை பயன்படுத்தி தம்மை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் சிபிஐ-ன் பல்நோக்கு கண்காணிப்பு குழு விசாரணை அறிக்கைக்காக காத்திருப்பதாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
ஆனால் சிபிஐ தரப்பு, 7 பேர் விடுதலைக்கும் இந்த விசாரணை அறிக்கைக்கும் எந்த தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியது. உச்சநீதிமன்றமும் இதை ஏற்றுக் கொண்டது. அத்துடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் காலதாமதம் செய்யாமல் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது.
மத்திய அரசு முட்டுக்கட்டை
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களின்படி மாநில அரசு தமக்குள்ள 161-வது பிரிவு அதிகாரத்தின் கீழ் 7 பேரை விடுதலை செய்ய முடியும். இருந்தபோதும் மத்திய அரசு, அப்படி எல்லாம் அதிகாரம் இல்லை என்கிறது. மத்திய அரசின் இந்த முட்டுக்கட்டை வாதத்துக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் எந்த பதிலும் சொல்லாமல் இருந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை நடைபெறுகிறது. இறுதி விசாரணையின் போதாவது தமிழக அரசு, 161-வது பிரிவின் கீழ் தமக்கு 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் இருக்கிறது என்கிற வாதத்தை முன்வைக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் நாளை விசாரணை முடிவில் 7 தமிழர் விடுதலை தொடர்பான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.