போர்க் கப்பலை ராஜீவ் குடும்பம் விடுமுறை உல்லாசத்துக்குதான் பயன்படுத்தியது: மாஜி கடற்படை அதிகாரிகள்
டெல்லி: ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை ராஜீவ் குடும்பம் விடுமுறை உல்லாசத்துக்கு பயன்படுத்தியது உண்மைதான் என முன்னாள் கடற்படை அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
1987-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் லட்சத்தீவுகளில் ராஜீவ் காந்தி குடும்பம், அமிதாப்பச்சன் குடும்பம் விடுமுறையை கொண்டாடியது. அப்போது நாட்டின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விராத்தை ராஜீவ் குடும்பம் சொந்த பயன்பாட்டுக்கு உபயோகித்தது என்பது அப்போதே எழுந்த சர்ச்சை.
தற்போது லோக்சபா தேர்தலின் போது இவ்விவகாரத்தை பிரதமர் மோடி எழுப்பினார். இந்த பஞ்சாயத்து இன்னமும் ஓய்ந்தபாடில்லை. பிரதமர் மோடியின் கருத்தை மறுத்து முன்னாள் கடற்படை தளபதி எல். ராமதாஸ் நேற்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
போபர்ஸ் பீரங்கி பேர ஊழல்... ராஜீவ், ராகுலை விடுங்க... 'அருண்ஜேட்லி''தான் பதில் சொல்லனும்.. ஏன்?
மோடிக்கு ஆதரவு
இதற்கு பதிலாக மற்றொரு முன்னாள் கடற்படை தளபதி வி.கே. ஜேட்லி, முன்னாள் கடற்படை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் ஹரீந்தர் சிக்கா ஆகியோர் கருத்துகளை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக வி.கே. ஜேட்லி கூறியதாவது:
அட்மிரல் கேபினில் ராஜீவ் குடும்பம்
ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை ராஜீவ் குடும்பம் பயன்படுத்தியதற்கு நான் நேரடி சாட்சி. அட்மிரலின் கேபினைத்தான் ராஜீவ் குடும்பம் பயன்படுத்தியது. லட்சத்தீவு செல்ல ஐ.என்.எஸ். விராத் போர்க்கப்பலை ராஜீவ் குடும்பம் உபயோகித்தது. இத்தனையும் சோனியாவுடன் வெளிநாட்டினரும் வந்தனர்.
போர்க்கப்பலில் ஓய்வு
அது ஒன்றும் மிகச் சிறிய கப்பல் அல்ல. லட்சத்தீவுக்கு ராஜீவ் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் சென்றடைந்தனர். அவர்கள் போர்க்கப்பலில்தான் தங்கினர். இவ்வாறு வி.கே. ஜேட்லி கூறினார்.
மவுனிகளாக அதிகாரிகள்
மற்றொரு கடர்படை அதிகாரியான ஹரீந்தர் சிக்கா கூறுகையில், போர்க்கப்பலை முறைகேடாக பயன்படுத்திய போது அதை எதிர்த்து கேள்வி கேட்க முடியாதவர்களாக மவுனியாக இருந்தோம். வெளிநாட்டு குடியுரிமை பெற்ற சோனியாவும் வெளிநாட்டவரும் போர்க்கப்பலின் பல பகுதிகளுக்கு அதுவும் அதிகாரிகள் கூட அனுமதிக்கப்படாத பகுதிகளுக்கு சென்றனர். இதை அனுமதிக்கக் கூடாது என சுட்டிக் காட்டிய போது வாயை மூடிக் கொண்டு இருக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இவ்வாறு ஹரீந்தர் சிக்கா தெரிவித்தார்.