விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு.. அப்ரூவராகும் ராஜீவ் சக்சேனா.. 'அரசியல்வாதிகளுக்கு' சிக்கல்?
டெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இடைத்தரகர் ராஜீவ் சக்சேனா, அரசு தரப்பு சாட்சியமாக மாறுவதற்கு, சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தனது ஒப்புதலை வழங்கியது.
காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் கடந்த 2010ம் ஆண்டு இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லான்ட் நிறுவனத்திடம் இருந்து நமது நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு ரூ.3,600 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
தினகரனுக்கு குக்கர் சின்னம் கொடுக்குறதுல என்னதான் பிரச்னை... உச்சநீதிமன்றம் கேள்வி
இதில், ரூ.360 கோடி லஞ்சப் பணம் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வணிகத்தில், இடைத்தரகராக செயல்பட்ட ராஜீவ் சக்சேனா, மைக்கேல் சக்சேனா ஆகியோர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்து வருகின்றனர்.
அதிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு என்பதால், ரகசியமாக விசாரணை நடந்து வருகிறது. கடந்த 6ம் தேதி நீதிபதி அறையில் நடந்த ரகசிய விசாரணையின்போது, இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக மாறி வாக்குமூலம் அளிக்க விரும்புவதாக ராஜீவ் சக்சேனா கூறினார். இதை ஏற்றுக் கொண்டு, அமலாக்கத்துறை வழக்கறிஞரும் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது ராஜீவ் சக்சேனா அரசு தரப்பு சாட்சியாக மாறுவதற்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது. இந்திய விமானப்படை அதிகாரிகள், சில அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கைமாறப்பட்டதாக ராஜீவ் சக்சேனா கூறியுள்ளார். எனவே, அவர் அப்ரூவராக மாறி அளிக்கும் சாட்சியம் இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.