எலுமிச்சம் பழம் வைத்து நசுக்குவது எங்களது நம்பிக்கை.. ஏன் கிண்டலடிக்கிறீங்க.. ராஜ்நாத் சிங்
Recommended Video
டெல்லி: ரபேல் போர் விமானத்திற்கு தேங்காய், பழம் வைத்து பூஜை செய்ததை ஏன் கிண்டலடிக்கிறார்கள். அது எங்களது நம்பிக்கை. எனவே அதைச் செய்தோம். இதில் என்ன தவறு என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுள்ளார்.
பிரான்ஸ் சென்றிருந்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு முதல் ரபேல் போர்விமானத்தைப் பெற்றுக் கொண்டார். அப்போது ரபேல் போர் விமானத்திற்கு அவர் தேங்காய் பழம் வைத்து பூஜை செய்தததற்கும், விமானத்தின் டயர்களுக்குக் கீழே எலுமிச்சம் பழங்களை வைத்து நசுக்கி விமானத்தை கிளப்பியதற்கும் கேலி கிண்டல்கள் கிளம்பின. காங்கிரஸ் கட்சி கூட விமர்சனம் செய்திருந்தது.
எலுமிச்சம் பழத்தில்தான் சக்தி இருக்கிறது என்றால் பேசாமல் 4 எலுமிச்சம் பழங்களை வாங்கியிருக்கலாமே.. எதற்காக ரபேல் விமானங்களை இவ்வளவு செலவு செய்து வாங்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் கிண்டல்கள் கேலிகள் கிளம்பின. இந்த நிலையில் டெல்லி திரும்பிய ராஜ்நாத் சிங் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
7 விமானங்கள் வரும்
அவர் கூறுகையில், ஏப்ரல் அல்லது மே மாதத்தில் 7 ரபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வந்து சேரும். மணிக்கு 1800 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப் பாயக் கூடியவை இவை. நான் மணிக்கு 1300 கிலோமீட்டர் வேகத்தில் ரபேல் விமானத்தில் பயணித்துப் பார்த்தேன். இந்த வெற்றிக்கெல்லாம் முக்கியக் காரணம் பிரதமர் மோடிதான்.
வெற்றி
எனது பிரான்ஸ் பயணம் வெற்றிகரமாக அமைந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானையும் சந்தித்தேன். அவருடன் 35 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினேன். நான் விமானத்திற்கு சாஸ்திர பூஜை நடத்தியதை கிண்டல் செய்கிறார்கள். அது தவறு.
எலுமிச்சம் பழம் எங்களது நம்பிக்கை
வாயில் வந்ததையெல்லாம் பேச அவர்களுக்கு உரிமை உண்டு. அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. எனக்கு சரி என்று பட்டதை நான் செய்தேன். அதை தொடர்ந்தும் செய்வேன். இது எங்களது நம்பிக்கை. மனிதர்களையும் மீறிய சூப்பர் சக்தி உள்ளது. இதை நாங்கள் நம்புகிறோம். குழந்தையிலிருந்து இந்த நம்பிக்கை எனக்கு உள்ளது.
கேலி செய்ய மாட்டேன்
அனைத்து மதத்தினரும் அவரவர் நம்பிக்கைப்படி பிரார்த்தனை செய்ய, வழிபட உரிமை உண்டு. அவர்களது நம்பிக்கையில் தலையிடக் கூடாது. வேறு யாராவது இதேபோல செய்திருந்தால் நிச்சயம் நான் அதை கேலி செய்திருக்க மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் கருத்து மக்கள் கருத்தாக முடியாது என்றார் ராஜ்நாத் சிங்.