கஜா புயல் பாதித்த தமிழகத்துக்கு இல்லை…புதுச்சேரி உள்பட 6 மாநிலங்களுக்கு ரூ. 7,214 கோடி ஒதுக்கீடு
டெல்லி:புதுச்சேரி, ஆந்திரா, உ.பி,இமாச்சலப்பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ. 7,214 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கூடுதலாக நிதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.
கடந்தாண்டு நவம்பர் 15ம் தேதி வீசிய கஜா புயல் தமிழகத்தை கடுமையாக பாதித்தது. குறிப்பாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 டெல்டா மாவட்டங்கள் கடும் பாதிப்பை எதிர்கொண்டன.
லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சாய்ந்ததாலும், வீடுகளை இழந்தும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக இடைக்கால நிவாரணமாக ரூ.15,000 கோடி தரக்கோரி பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.
பாதிப்புகள் ஆய்வு
பின்னர் மத்திய அரசு சார்பில் ஆய்வுக்குழுவினர் தமிழகம் வந்து கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து சென்றனர். அதனையடுத்து,ரூ. 1500 கோடி இடைக்கால நிதியை, கஜா புயல் நிவாரண நிதியாக மத்திய அரசு வழங்கியது.
நிதி தர முதல்வர் கோரிக்கை
தமிழக அரசு கோரிய நிதியை ஒதுக்காத நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கினால் தான் நிவாரணப் பணிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் அறிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது.
ரூ.7,214 கோடி ஒதுக்கீடு
கூட்டத்தில் அமைச்சர்கள் பியூஷ் கோயல், ராதாமோகன் சிங், அமைச்சக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதில் புதுச்சேரி, ஆந்திரா, உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம், குஜராத், கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களுக்கு பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ. 7,214 கோடி ஒதுக்கப் பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.4,700 கோடி நிதி
கஜா புயல் நிவாரண நிதியாக புதுச்சேரிக்கு ரூ.13.09 கோடி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது. அதிகபட்சமாக வறட்சி நிவாரணமாக மகாராஷ்டிராவுக்கு 4,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல, வறட்சி நிவாரணமாக கர்நாடகத்துக்கு ரூ. 949.47 கோடி, ஆந்திராவுக்கு ரூ.900 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்துக்கு நிதி இல்லை
குஜராத் மாநிலத்துக்கு 127 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் கஜா புயல் நிவாரணமாக தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அப்போது, இடைக்கால நிவாரணமாக ரூ.1500 கோடி மட்டுமே ஒதுக்கிருந்தது. விரைவில் கூடுதல் நிதியை ஒதுக்கும் என்று தமிழக அரசு எதிர்பார்த்த நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்துக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.