டயருக்கு கீழே எலுமிச்சை வைத்து, தேங்காய் சுற்றி.. ரபேல் போர் விமானத்திற்கு பூஜை செய்த ராஜ்நாத்சிங்
Recommended Video
டெல்லி: பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானங்களை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று பெற்றுக் கொண்டார். இதையடுத்து ரஃபேல் போர் விமானத்தின் டயர்களுக்கு கீழே எலுமிச்சை பழம் வைத்து, குங்குமம் வைத்து பூஜைகள் செய்தார் ராஜ்நாத்சிங்.
பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரூ60,000 கோடி மதிப்பில் 36 ரஃபேல் போர் விமானங்களைப் பெற பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு 2016-ல் ஒப்பந்தம் செய்தது. பிரான்சில் தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம், விஜயதசமி நாளான இன்று அதிகாரப்பூர்வமாக இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிரான்ஸின் பார்டியாக்ஸ் நகருக்கு அருகே உள்ள மெரிக்னாக் விமான படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இந்த போர் விமானத்தை முறைப்படி பெற்றுக் கொண்டார்.
இன்று விஜயதசமி என்பதால், இந்திய ராணுவத்திற்கு வெற்றி கிடைக்கும் என்ற சென்டிமென்ட்தான் இன்றைய தினம் ரஃபேல் போர் விமானத்தை பெறுவதற்கு காரணமாம். அதேபோல, ரஃபேல் போர் விமானத்திற்கு ஆயுத பூஜை மாதிரியில் பூஜை செய்தார் ராஜ்நாத்சிங்.
Mérignac(France): Defence Minister Rajnath Singh performs 'Shastra Puja', on the Rafale combat jet officially handed over to India. https://t.co/emOeslAt5e pic.twitter.com/M7SHuSBcD2
— ANI (@ANI) October 8, 2019
இதற்காக டயர்கள் அடியில் எலுமிச்சை பழம் வைக்கப்பட்டது, விமானத்தின் மீது சந்தனம், குங்குமம் வைக்கப்பட்டது. தேங்காய் சுற்றி உடைக்கப்பட்டது. விமானத்தின் முன்பகுதியில், ஓம் என்று எழுதினார், ராஜ்நாத்சிங். பிரணவ மந்திரம் என இந்துக்கள் நம்பும் ஓம் எழுத்தை, விமானத்தின்மீது, எழுதினார் ராஜ்நாத்சிங். ரபேல் போர் விமானத்தின் மீது மத்திய அரசு வைத்துள்ள சென்டிமென்ட்களை இது உணர்த்துவதாக இருந்தது.