காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களையும் விடுவிக்க பிரார்த்தனை செய்கிறேன்.. ராஜ்நாத் சிங் பேட்டி
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் மூன்று முன்னாள் முதல்வர்களை தடுத்து வைக்கப்பட்டதிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்வதாகவும், காஷ்மீரில் நிலைமையை சீராக்க அவர்கள் பங்களிப்பார்கள் என்று நம்புவதாகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்,.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மூன்று முன்னாள் முதல்வர்களான - தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபாரூக் அப்துல்லா மற்றும் அவரது மகன் உமர் அப்துல்லா மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (பி.டி.பி) மெஹபூபா முப்தி உள்பட ஏராளமான அரசியல்வாதிகளை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆக்ஸ்ட் மாதம் சிறை வைத்தது.
அதன் பின்னர் 144 தடை உத்தரவு பிறப்பித்த அரசு, மற்ற மாநில மக்களை உடனடியாக வெளியே உத்தரவிட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றியது. அத்துடன் 70ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த அந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.
தடுப்பு காவலில் தலைவர்கள்
அப்போதிருந்து பெரும்பாலான அரசியல்வாதிகள் விடுவிக்கப்பட்டாலும், மூன்று முதல்வர்களும். 12க்கும் மேற்பட்ட அரசியல்வாதிகளும் தொடர்ந்து ராணுவத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பாரூக் அப்துல்லா மீது செப்டம்பரில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பி.எஸ்.ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஒமர் அப்துல்லா மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோரும் சமீபத்தில் அதே பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.
கைதுக்கு என்ன காரணம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கிய இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அவர்களின் ஆத்திரமூட்டும் அறிக்கைகள் மற்றும் சிறப்புஅந்தஸ்து ரத்துக்கு எதிரான அச்சுறுத்தல்களை அரசாங்கம் மேற்கோள் காட்டியே மூன்று முன்னாள் முதல்வர்களையும் மத்திய அரசு இன்று வரை சிறைவைத்துள்ளது.
அமைதி நிலவுகிறது
இந்நிலையில் சனிக்கிழமையன்று ஐ.ஏ.என்.எஸ் செய்தி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்ள பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறுகையில் "காஷ்மீரில் அமைதி நிலவுகிறது. அங்கு நிலைமை வேகமாக முன்னேறி வருகிறது. மாநிலத்தின் முன்னேற்றத்துக்காக எடுக்கப்பட்ட முடிவுகளும் (அரசியல்வாதிகளை காவலில் இருந்து விடுவிப்பது) இறுதி செய்யப்படும். அரசாங்கம் யாரையும் இதுவரை சித்திரவதை செய்யவில்லை.
ராஜ்நாத் சிங்
காஷ்மீரின் நலன்களுக்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எல்லோரும் அதை வரவேற்க வேண்டும், உமர் மற்றும் பாருக் அப்துல்லாக்கள் மற்றும் மெஹபூபா முப்தி ஆகியோரை காவலில் இருந்து விடுவிக்க பிரார்த்தனை செய்கிறேன். அவர்கள் வெளியே வந்தவுடன், காஷ்மீரின் நிலைமையை மேம்படுத்துவதற்கு உழைத்து பங்களிக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்," இவ்வாறு கூறினார்.