பாங்கோங் ஏரி அருகே.. சீன-இந்திய படைகள் வாபஸ் பெறப்படுகிறது.. ராஜ்யசபாவில் ராஜ்நாத் சிங் தகவல்
டெல்லி: சீனாவால் போர் பதற்றம் ஏற்பட்ட பாங்காங் ஏரி பகுதிகள் உள்ள கிழக்கு லடாக் பகுதியில் தற்போது உள்ள நிலைமை குறித்து ராஜ்யசபாவில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கமளித்தார். அப்போது அவர் பேசுகையில், நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள, தயார் என்பதை நமது பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன என்றார்.
கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் கடந்த ஆண்டு ஊடுருவியது. இந்தியாவிற்கு சொந்தமான கல்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்தது.
அப்போது கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தரப்பில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த தகவலை வெளியிடாமல் சீனா மறைத்துவிட்டது.
இதையடுத்து இந்தியா சீனா இடையேஇதுவரை கிழக்கு லடாக் பிரச்சனை தொடர்பாக 9 முறை பேச்சுவார்த்தைகள் நடந்தது. பேச்சுவார்த்தையின் படி, படைகளை வாபஸ் பெறுவதாக சீனா ஒப்புக்கொண்டது. ஆனால் சீன ராணுவம் ஒப்பந்தபடி நடந்து கொள்ளவில்லை.
நகரும் பீரங்கிகள்.. பின்வாங்கும் சீன-இந்திய படைகள்.. லடாக் எல்லை இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா?
இந்நிலையில் பாங்காங் ஏரி பகுதிகளின் வடக்கு, தெற்கு கரைகளில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய, சீன படைகள் நேற்று முதல் திரும்ப பெற்று வருவதாக சீன ராணுவ செய்தி தொடர்பாளர் வூ கியான் தெரிவித்தார். ஆனால் இந்த தகவலை இந்திய ராணுவமோ அல்லது மத்திய அரசோ இதுவரை உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா அவையில் பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், சீன படைகள் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றன. நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயார் என்பதை நமது பாதுகாப்புப் படைகள் நிரூபித்துள்ளன. எல்லை பகுதியில் அமைதியான சூழ்நிலையை நிலைநாட்ட இந்தியா விரும்புகிறது. இந்தியா சீனா இடையிலான இருதரப்பு உறவுகளைப் பேணுவதில் இந்தியா எப்போதும் வலியுறுத்தியுள்ளது.
சீனாவுடனான நமது தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் காரணமாக பங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் படைகளை விலக்கி கொள்ள உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டையடுத்து படைகள் படிப்படியாக அகற்றப்படும்.
இவ்வாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.