எல்லையில் இந்தியா, சீனா படைகள் வாபஸ்- பேச்சுவார்த்தைகள் மும்முரம்- ராஜ்நாத்சிங் தளபதிகளுடன் ஆலோசனை
டெல்லி: லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இந்தியா, சீனா படைகள் விலக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் டெல்லியில் இன்று முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆலோசனை நடத்துகிறார்.
கால்வன் பள்ளத்தாக்குப் பகுதியை சீனா ஆக்கிரமிக்க முயற்சித்தது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.
இதனைத் தொடந்து எல்லையில் போர் பதற்றம் உருவானது. பின்னர் இருநாடுகளிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் குவித்திருந்த படைகளை விலக்க ஒப்புக் கொண்டன.
தற்போது லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதிகளில் இருந்து இருநாட்டு ராணுவமும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இருநாடுகளிடையேயான பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தொடரவும் உள்ளன.
இன்றைய பேச்சுவார்த்தைக்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமை வகிப்பார் என கூறப்படுகிறது. எல்லையில் இந்திய படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது தொடர்பாக சீனா தரப்பில் அஜித் தோவல் எடுத்துக் கூற உள்ளார்.
மேலும் இந்தியா-சீனா இடையேயான WMCC எனப்படுகிற இருதரப்பு ஒருங்கிணைப்பு- ஆலோசனைக் குழுவின் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதேபோல் எல்லை நிலவரம் தொடர்பாக முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை நடத்தவும் உள்ளார். இந்த சந்திப்பில் முப்படைகளின் கூட்டு தளபதி பிபின் ராவத்தும் பங்கேற்க உள்ளார்.