இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டிக்காக ஒத்தி வைக்கப்பட்டதா ராஜ்யசபா?
டெல்லி: கர்நாடக அரசியல் நெருக்கடி தொடர்பாக நடந்த தர்ணாவால் ராஜ்யசபா இன்று நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா-நியூசிலாந்து உலக கோப்பை அரையிறுதியைக் காணும் நோக்கில், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இப்படி தர்ணா நடத்தி அவையை ஒத்தி வைக்க காரணமாகியுள்ளார்கள் என கூறியுள்ளார் பாஜக எம்.பி, ஸ்வபன் தாஸ்குப்தா.
கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பங்கள் தொடர்பாக, காங்கிரஸ் எம்பிக்கள் தர்ணா நடத்தியதால் இன்று மாநிலங்களவையில் அவை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை. எந்த ஒரு பணிகளும் சபையில் நடத்தப்படவில்லை.
கர்நாடகாவில் காங்கிரஸ்-மஜத அரசுக்குள் குழப்பத்தை பாஜக தூண்டுவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ், பாஜகவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தர்ணா நடத்தினர். கர்நாடகாவில் ஜனநாயகம் கொல்லப்படுவதாக காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பொதுத்துறை பிரிவுகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் சபைத் தலைவர் இருக்கை முன்பாக நுழைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். எனவே அவைத் தலைவர் வெங்கையா நாயுடு அவை நடவடிக்கைகளை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.
இதன்பிறகு மீண்டும் அவை கூடியபோதிலும், தர்ணா தொடர்ந்ததால் 2 மணியளவில், அவை நாள் முழுக்க ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதுபற்றி ட்விட்டரில் ஸ்வபன் தாஸ்குப்தா, கூறுகையில் "காங்கிரசும் டி.எம்.சியும் மாநிலங்களவை நடவடிக்கையை சீர்குலைத்தனர். அவர்கள் கிரிக்கெட்டைப் பார்க்க விரும்புவதால் நாள் முழுக்க அவையை ஒத்தி வைக்கச் செய்துள்ளனர் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் நேற்று கர்நாடக விவகாரம் பற்றி பேசியபோது, ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால்தான், கர்நாடகாவிலுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ராஜினாமா செய்திருப்பார்கள் என கேலியாக பதில் சொன்னார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங். இன்று, பாஜக எம்பியான ஸ்வபன் தாஸ்குப்தா கிரிக்கெட்டை முன் வைத்து கேலி செய்துள்ளார்.
கர்நாடக அரசியல் விவகாரத்தை காங்கிரசை மட்டம் தட்டுவதற்காக, பாஜக பயன்படுத்திக்கொள்வது இதன் மூலம் நன்கு தெரிகிறது.