எதிர்க்கட்சிகள் அமளி.. லோக்சபாவில் முத்தலாக் மசோதா தாக்கல்.. இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி: மேகதாது விவகாரத்தில் அதிமுக எம்.பி.க்களின் அமளியை தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. லோக்சபாவில் கடும் அமளிக்கிடையே முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது.
பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. அப்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர்.
மேகதாது விவகாரம் தொடர்பாக முதலில் விவாதிக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். மாநிலங்களவையில் அமளி நீடித்ததால் அவையை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மறுபக்கம் லோக்சபாவில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியிலும் அலுவல்கள் நடைபெற்றன. அரசு முத்தலாக் மசோதாவையும் தாக்கல் செய்தது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து சூடான வாதத்தில் ஈடுபட்டுள்ளது.
முத்தலாக் மசோதாவைத் தாக்கல் செய்ததற்கு காங்கிரஸ் உறுப்பினர் சசி தரூர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். பின்னர் காங்கிரஸ் உறுப்பினர்கள் ரபேல் விவகாரத்தில் கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை நடத்தக் கோரி கோஷமிட்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.