ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல்.. தோல்வி தெரிந்தும் வேட்பாளரை நிறுத்தும் ஐ.மு.கூ.. 12 கட்சிகள் ஆதரவு
டெல்லி: ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளருக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள நிலையிலும், எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆர்ஜேடி கட்சியின் மனோஜ் ஜா நிறுத்தப்படுகிறார். அவருக்கு 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
நாளை ராஜ்யசபா துணைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதளத்தைச் சேர்ந்த ஹர்வன்ஷ் சிங்கே வெல்லும் நிலையில் உள்ளார். காரணம் அக்கட்சிக்கும், அதன் கூட்டணிக்கும் தேவையான அளவு உறுப்பினர் எண்ணிக்கை உள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் ஆர்ஜேடி கட்சியின் மனோஜ் ஜா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸ், சமாஜ்வாடி, திரினமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக, சிவசேனா, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, கேரளா காங்கிரஸ் மணி, சிபிஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவையே அவை.
இவர்கள் தவிர பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவற்றின் ஆதரவையும் பெற முயற்சிகள் நடக்கிறதாம். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்ட முயற்சிகள் நடப்பதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கே வாய்ப்புகள் பிரகாசம் என்றாலும் கூட போட்டியில்லாமல் அக்கூட்டணியின் வேட்பாளர் தேர்வு பெறக் கூடாது என்ற காரணத்திற்காக பொது வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து மனோஜ் ஜாவை நிறுத்தியுள்ளனர்.
லாலு கட்சியை விட்டு விலகுவதாக அறிவித்த.. முன்னாள் அமைச்சர் ரகுவன்ஷ் பிரசாத் திடீர் மரணம்
இத்தேர்தலில் வெற்றி பெற 123 வாக்குகள் தேவை. ராஜ்யசபாவில் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 245 பேராகும். இதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மொத்தம் இருப்பதே 91 உறுப்பினர்கள்தான். பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி ஆகியவையும் கூட காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை ஆதரிப்பதாக வைத்துக் கொண்டாலும் கூட ஆதரவு எண்ணிக்கை மேலும் 4 கூடி 95 ஆக மட்டுமே இருக்கும். வெற்றி பெற இன்னும் 28 வாக்குகள் தேவை.
மறுபக்கம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவிடம் மட்டுமே 87 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 101 ஆக உள்ளது. இதுதவிர பிஜூ ஜனதாதளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகியவையும் பாஜக கூட்டணி வேட்பாளரையே ஆதரிப்பார்கள். எனவே தாராளமாக 123 பேரின் ஆதரவைப் பெறும் நிலையிலேயே தேசிய ஜனநாயகக் கூட்டணி உள்ளது.