சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களுக்கு டீ வாங்கி கொண்டு வந்த ராஜ்யசபா துணை தலைவர் .ட்விஸ்ட்
டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களுக்கும் காலையில் தேநீர் கொண்டு வந்தார் ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ். அதை அவரே எம்பிக்களுக்கு வழங்கினார். இது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் மசோதா மீதான வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் 8 பேரை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ராஜ்யசபாவில் வேளாண் மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
|
துணை தலைவரின் மைக் சேதம்
குரல் வாக்கெடுப்புக்கு ஆட்சேபம் தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் போராடிய நிலையில் அதற்கு ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் அனுமதி வழங்கினார். இதனால் ஆத்திரம் அடைந்த எம்பிக்கள், துணை தலைவர் ஹரிவன்ஷ் மீது மசோதா நகலை கிழித்து எறிந்தனர் சிலர் துணை தலைவரின் மைக்கை சேதப்படுத்தினர். அவையில் மையப்பகுதியில் முற்றுகையிட்டனர். வரம்பு மீறி அமளியில் ஈடுபட்டதால் எம்பிக்களை பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர்.
கூட்டத்தொடர் முழுவதும்
நாடாளுமன்ற நடத்தை விதிகளை மீறியதாக துணை தலைவர் ஹரிவன்ஷ் மீது 12 எதிர்க்கட்சி எம்பிக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தனர் பதிலுக்கு வரம்பு மீறி நடந்து கொண்ட எம்பிக்கள் மீது பாஜக எம்பிக்கள் உரிமை மீறல் புகார் எழுப்பினர். இதையடுத்து அமளியில் ஈடுபட்ட திரிணாமுல் காங் எம்பி டெரக் ஓ பிரைன், டோலா சென், இளமாறம், கதீரம், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்பி ராஜீவ் சாதவ், நசீர் ஹூசைன், ரிபுன் போரேன், மார்க்சிஸ்ட் எம்பி கேகே ராகேஷ் ஆகிய 8 எம்பிக்களை இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்த ராஜ்யசபா தலைவர் வெங்கய்ய நாயுடு உத்தரவிட்டார்.
விடிய விடிய போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அங்கேயே கொட்டும் பனியில் தங்கிய அவர்கள் இன்று காலையில் தர்ணாவினை தொடர்ந்தனர்.
டீ வாங்கி வந்தார் ஹரிவன்ஷ்
இந்நிலையில யாரும் எதிர்பார்க்காத விதமாக, ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவன்ஷ் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் எம்பிக்களுக்கு காலையில் தேநீர் கொண்டு வந்தார். அவரே அவர்கள் அருகில் அமர்ந்து தேநீரை வழங்கினார். அந்த காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. ஏனெனில் ஹரிவன்ஷ் சிங்கின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளி செய்ததால் தான் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.