19ம் தேதி ராஜ்யசபா தேர்தல்.. அதிக இடங்களை வென்று பெரும்பான்மையை நோக்கி நகரும் பாஜக
டெல்லி: வரும் 19ம் தேதி நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் பாஜக கூட்டணி ராஜ்யசபாவில் பெரும்பான்மையை எட்டி பிடிக்கும் தூரத்திற்கு நகர்கிறது. அடுத்த ஆண்டிற்குள் பாஜக, ராஜ்யசபாவில் முழு பலம் என தெரிகிறது.
2020ம் ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் காலியாக உள்ள 55 எம்பி. பதவி இடங்களில் 37 இடங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்தது. போட்டியின்றி இந்த எம்பிக்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மீதமுள்ள 18 இடங்கள் மற்றும் புதிதாக காலியான 6 இடங்கள் உள்பட , மொத்தம் 24 இடங்களுக்கு இம்மாதம் 19ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் தோழமைக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக அதிக இடங்களில் எளிதாக வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.
டிராகனை வீழ்த்த வரும் கங்காரு.. ஆஸி. பிரதமருடன் அவசர மீட்டிங் போடும் மோடி.. இந்தியா உருவாக்கும் அணி!
காலியான 6 இடங்கள்
இந்த 24ல், ஆந்திரா, குஜராத், கர்நாடகாவில் தலா 4 இடங்களுக்கும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா 3 இடங்களுக்கும், ஜார்கண்டில் 2, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், அருணாச்சலில் தலா ஒரு இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக காலியான 6 இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய 9ம் தேதி கடைசி நாள் என்றும், திரும்ப பெற 12ம் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஒத்துழைப்பு இல்லை
ராஜ்யசபாவில் தற்போது பாஜகவுக்கு 75 உறுப்பினர்கள் உள்ளார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 88 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, பாஜகவின் தோழமை கட்சிகளான அதிமுக, பிஜூ ஜனதா தளம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், டிஆர்எஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் எண்ணிக்கை 27 ஆக உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்த்தால், 115 ஆக உள்ளது. இதில் அதிமுக (9இடங்கள்) தவிர மற்ற கட்சிகள் பெரிய மசோதக்களை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரிய அளவில் ஒத்துழைப்பு கொடுப்பது இல்லை. இதனால் முழு பலம் பெற வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
எதிர்க்கட்சிகள் பலம்
ராஜ்யசபாவில் எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு 39, திமுக.வுக்கு 5, தேசியவாத காங்கிரஸ், சிவசேனாவுக்கு தலா 3 என மொத்தம் 69 உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, 3 சுயேச்சைகள், ஒரு நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர், மதிமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் தலா ஒரு உறுப்பினர்கள் உள்ளனர்.
பாஜக வெற்றி பெறும்
வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க இருக்கும் 24 இடங்களில், மத்திய பிரதேசத்தில் 3 இடங்களில் 2, ராஜஸ்தான், ஜார்கண்டில் தலா 1, கர்நாடகாவில் 2, அருணாச்சல், மிசோரமில் தலா ஒரு இடத்தை பாஜக வெற்றி பெறும் ஆந்திராவில் 5 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 4 இடங்களை வெல்லும். மத்திய பிரதேசத்தில் ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்ட சிலருக்கு பாஜக சீட் வழங்கி உள்ளது. இவருக்கு போட்டியாக காங்கிரஸ் தரப்பில் திக் விஜய் சிங், பூல் சிங் பரையா ஆகியோர் போட்டியிடுகின்றனர். அங்கு 3 இடங்களுக்கு 4 பேர் களம் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும்.
13 இடங்களில் வாய்ப்பு
குஜராத்தில் காங்கிரஸ், பாஜ தலா இரண்டு சீட்களை கைப்பற்ற வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பாஜ-காங்கிரஸ் இடையே கடும் போட்டி இருக்கிறது. அங்குள்ள எம்எல்ஏ.க்களுக்கு வலை வீசி வருகின்றன. மபி மற்றும் குஜராத்தில் கூடுதலாக ஒரு இடங்களை வெல்ல பாஜக வாய்ப்பு உள்ளது. இதற்கிடையே இந்த தேர்தலில் 13 இடங்களில் பாஜக வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ராஜ்யசபாவில் பாஜகவின் பலம் 88 ஆக உயரகூடும். பாஜக கூட்டணியின் பலம் 101 ஆக உயரவும் வாய்ப்பு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நிறைய இடங்கள் காலியாக உள்ளதால் வரும் 2021ம் ஆண்டுக்குள் பாஜக ராஜ்யசபாவில் முழுமையாக பலன் பெறும் வாய்ப்பு உள்ளது. பாஜகவின் பலம் 123 ஆக உயர உள்ளது. இதனால் அடுத்த ஆண்டு பாஜக விரும்பிய மசோதாக்களை எல்லாம் எளிதாக சட்டமாக்க முடியும்.