மேகதாது, ரபேல் விவகாரம்... தொடர் அமளியால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
டெல்லி: மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ரபேல் விவகாரம், மேகதாது அணை விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரம் திங்கட்கிழமை மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர் வார இறுதி நாட்கள் மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை முடிந்து இன்று காலை மீண்டும் கூட்டம் கூடியது.
எதிர்க்கட்சிகள் அமளி
காலை 11 மணிக்கு அவை கூடியதும் மக்களவையில் ரபேல் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். அதே போல், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக எம் பிக்கள் அவையின் மையப் பகுதிக்கு சென்று கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து, அவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு
இதேபோல் மாநிலங்களவையில் மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். மற்ற கட்சிகளின் எம்பிக்களும் தங்களது மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை எழுப்பினர். உறுப்பினர்களின் அமளி அதிகரித்து கொண்டு இருந்ததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
|
கர்நாடகா எம்.பி-க்கள் போராட்டம்
இதனிடையே, நாடாளுமன்ற வளாகத்தில் கர்நாடக எம்.பி.க்கள் மேகதாது திட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் கைகளில் பதாகைகள் ஏந்தியபடி, மேகதாது திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.
போட்டி போராட்டம்
மேகதாது திட்டத்திற்கு எதிராக தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் போராட்டங்கள் தொடர்ந்து வரும் நிலையில், தற்போது, கர்நாடக நாடாளுமன்ற உறுப்பினர்கள், திட்டத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.