சு.சுவாமி, சுரேஷ் கோபி வரிசையில் பாஜகவில் ஐக்கியமாகிறாரா ராஜ்யசபா எம்.பி. ரஞ்சன் கோகாய்?
டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற ரஞ்சன் கோகாய், ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டிருப்பது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ராஜ்யசபா எம்.பியாகிவிட்ட ரஞ்சன் கோகாய் எப்போது பாஜகவில் ஐக்கியமாவார்? என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தால் ராஜ்யசபாவின் நியமன எம்.பி.யாக்கப்பட்டுள்ளார் ரஞ்சன் கோகாய். நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய முதலவாவது வடகிழக்கு மாநிலத்தவர் ரஞ்சன் கோகாய். நீதித்துறையின் சுதந்திரம் குறித்து கலகக் குரல் எழுப்பியவர்களில் கோகாயும் ஒருவர்.
கோகாய் விசாரித்த வழக்குகள்
பின்னர் ரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் எழுப்பப்பட்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது. தமது பதவி காலத்தில் மத்திய அரசுக்கு எதிரான ரபேல் ஊழல் வழக்குகளை தள்ளுபடி செய்தார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பான வழக்கில் இந்துக்களுக்கு சாதகமாக தீர்ப்பளித்தார். ரஃபேல் வழக்கில் தீர்ப்பு அளிக்கும் முன்னதாக பிரதமர் மோடியுடன் விருந்து ஒன்றில் கோகாய் கலந்து கொண்டது சர்ச்சையானது.
விமர்சனங்களுடன் எம்பி பதவி
தற்போது பணி ஓய்வுக்குப் பின்னர் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார் ரஞ்சன் கோகாய். இந்த நியமனம் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. தற்போது நியமன எம்.பி.யாக உள்ள மூத்த வழக்கறிஞர் துளசி பதவிக் காலம் முடிவடைவதால் அந்த இடத்துக்கு ரஞ்சன் கோகாய் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியால் 12 நியமன எம்.பி.க்களை நியமிக்க முடியும்.
பாஜகவில் ஐக்கியம்?
பொதுமாக நியமன ராஜ்யசபா எம்.பி.க்களாக பதவி பெறுகிறவர்கள் அதிகாரத்தில் இருக்கும் கட்சியில் ஐக்கியமாவது வழக்கம். இப்படித்தான் சுப்பிரமணியன் சுவாமி, நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்டோர் பாஜகவில் இணைந்தனர். இதனால் ரஞ்சன் கோகாயும் விரைவில் பாஜகவில் இணைவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
பாஜகவில் இணைந்த நியமன எம்பிக்கள்
தற்போதைய நியமன எம்பிக்களில் சுப்பிரமணியன் சுவாமி, சுரேஷ்கோபி, சம்பாஜி சத்ரபதி, ரூபா கங்குலி, ரராகேஷ் சின்ஹா, ரகுநாத் மொகபாத்ரா, ராம் ஷாகர், சோனால் மான்சிங் ஆகியோர் பாஜகவில் இணைந்துவிட்டனர். ஆனால் மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ்குப்தா, கல்வியாளர் நரேந்திர ஜாதவ், மேரி கோம் மற்றும் துள்சி ஆகியோர்தான் பாஜகவில் இணையாதவர்கள்.
ராஜ்யசபா எம்பி சீட் ஏற்பு ஏன்?
இதனிடையே ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு ரஞ்சன் கோகாய் பேட்டியளித்துள்ளார். அதில், நாளை டெல்லி செல்ல இருக்கிறேன். முதலில் ராஜ்யசபா எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கிறேன். அதன்பின்னர் ஊடகங்களை சந்திக்கிறேன். அப்போது ராஜ்யசபா எம்.பி. பதவியை ஏற்றது ஏன் என்பது குறித்து விளக்கம் தருகிறேன் என கூறியுள்ளார்.