அத்தியாவசியப் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு நீக்கம் - சட்ட மசோதா நிறைவேறியது
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து வெங்காயம், உருளைக் கிழங்கு போன்றவற்றை நீக்க வழிவகை செய்யும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 இன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது.
டெல்லி: அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் இருந்து, தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், வெங்காயம், உருளைக் கிழங்கு ஆகியவற்றை நீக்க வகை செய்யும் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 ராஜ்யசபாவில் இன்று நிறைவேற்றப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்த மசோதா 2020 ஞாயிறன்று லோக்சபாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தால், தொழில் முனைவோரின் ஊக்கம் குறைந்து ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு இருந்தது.
நல்ல அறுவடை காலங்களில் விவசாயிகள் பெரும் இழப்பை சந்திக்க நேரிடுகிறது. இதுபோன்ற சூழலில்தான் அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.
1995ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தில் தற்போது கொண்டு வரப்பட்ட திருத்தத்தின் மூலம், வெங்காயம், உருளைக்கிழங்கு, தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதிலும், இருப்பு வைப்பதிலும் எந்தவிதமான கட்டுப்பாடும் இனிமேல் விதிக்கப்படாது.
அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020, தனியார் முதலீட்டாளர்களுக்கு, தங்களது வணிக நடவடிக்கைகளில் ஒழுங்குமுறை தலையீடுகளால், ஏற்படும் அச்சத்தை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உற்பத்தி செய்வது, சேமித்து வைப்பது, கொண்டு சென்று விற்பனை செய்வதில் சுதந்திரமான செயல்பாட்டுக்கு இது வழி வகுக்கும். இதன் மூலம், விவசாயத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்க இது வகை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
லோக்சபாவில் இருந்து எதிர்கட்சிகள் வெளிநடப்பு - மழைக்கால கூட்டத்தொடரை புறக்கணிக்க முடிவு
இந்த மசோதா மீது லோக்சபாவில் காரசார விவாதம் நடந்தது. இந்த மசோதாக்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர் எனத் தெரிவித்தார். இறுதியில் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் பெரும்பான்மை ஆதரவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில்,அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்ட மசோதா மீது ராஜ்சபாவில் விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி வரிசைகளில் உறுப்பினர்கள் யாரும் இல்லாத நிலையில், எதிர்ப்பின்றி குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. இதன்பின் இந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுச் சட்டமாகும்.