குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. மரண தண்டனை விதிக்க சட்ட திருத்தம்
டெல்லி: குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையில் போக்சோ சட்டதிருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் அளிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. அந்த வகையில், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கான தண்டனையை அதிகபடுத்துவதற்காக போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது.
அந்த வகையில் போக்சோ சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த மசோதாவை மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி மாநிலங்களவையில் தாக்கல் செய்தார். விவாதத்தில் 28 எம்.பிக்கள் பங்கேற்றுப் பேசினர். கட்சிப் பாகுபாடின்றி இந்த மசோதாவில் கூறப்பட்டிருந்த சட்டத் திருத்தங்களுக்கு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மரண தண்டனை
குற்றவாளிகளை தடுக்கவும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், கண்ணியமான குழந்தை பருவத்துக்காகவும் பல்வேறு குற்றங்களுக்கான தண்டனைகளை அதிகரிக்க ஏதுவாக சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறார்களுக்கு ஆசை காட்டியும் வன்முறையைப் பயன்படுத்தியும் பாலியல் இச்சைக்கு உடன்படுத்துவோருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படும்.
20 ஆண்டுகள் சிறை
சிறுவர்களை ஆபாசமாக பயன்படுத்தினாலோ, ஆபாச படங்களை விநியோகித்தாலோ வாட்ஸ் ஆப் போன்றவற்றில் பரப்பினாலோ 5 முதல் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கவும் இச்சட்டம் வகை செய்கிறது.சிறுவர், சிறுமிகளிடம் பாலியல் வன்முறை குற்றத்திற்கு, சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கப்படலாம்.
அபராதம் விதிக்கப்படும்
தொடர்ந்து பேசிய ஸ்மிருதி இரானி, மசோதாவின் விதிகள் குறித்து விரிவாகக் கூறும் பட்சத்தில், பிரிவு 15-ன் கீழ், ஒரு குழந்தை சம்பந்தப்பட்ட ஆபாசப் படத்தை சேமித்து வைத்துள்ளவர்களுக்கு ரூ .5,000 (முதல் சந்தர்ப்பத்தில்) அபராதம் விதிக்கப்படும்.
விரைவான தீர்ப்பு
இரண்டாவது சந்தர்ப்பத்தில், குழந்தை ஆபாசப் படங்களை பகிரும், அனுப்பும் குற்றவாளிகள் பற்றி புகார் பெரும் பட்சத்தில் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும். பின்னர், அதற்கு உரிய சிறை தண்டனையும் வழங்கப்படும். சிறார்கள் மீதான பாலியல் குற்ற வழக்குகளை விசாரித்து விரைவாக தீர்ப்பளிக்க, ஆயிரத்து 23 விரைவு நீதிமன்றங்கள்அமைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.