எதிர்க்கட்சிகள் தொடர் அமளி.. நாள் முழுவதும் முடங்கிய ராஜ்யசபா.. முத்தலாக் தாக்கல் இல்லை
டெல்லி: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப் பட்ட ராஜ்யசபா பின்னர் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அதனால் இன்று முத்தலாக் மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.
முத்தலாக் நடைமுறையை தடை செய்யும் முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்ட மசோதா லோக்சபாவில் கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 245 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் கிடைத்தன.
வாக்கெடுப்புக்கு முன்பு இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், அஇஅதிமுக, திரிணாமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் லோக் சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தன. அதையடுத்து, ராஜ்யசபாவிலும் சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாவை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டிருந்தார். அதனை முன்னிட்டு எம்.பி.க்கள் அனைவரும் கண்டிப்பாக திங்கள்கிழமை அவைக்கு வர வேண்டும் என்று பாஜக தலைமை அறிவுறுத்தியிருந்தது.
ராஜ்யசபாவில் அமளி
ஏற்கனவே அறிவித்தபடி ராஜ்யசபா கூடியது. அப்போது அவையில் இருந்த அதிமுக எம்பிக்கள் மேகதாது அணை விவகாரத்தை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தியும் அவர்கள் தொடர்ந்து அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்த வண்ணம் இருந்தனர்.
தள்ளி வைக்கப்பட்ட ராஜ்யசபா
இதையடுத்து ராஜ்யசபா தொடங்கிய சிறிது நேரத்திலேயே மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் அவையானது மதியம் 2 மணிக்கு கூடியது. அப்போது நாடாளு மன்ற தேர்வு குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்காமல் முத்தலாக் மசோதாவுக்கு சட்ட வடிவம் கொடுக்க முயற்சிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத் பேசினார்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் பேச்சு
இந்த மசோதா பல கோடி முஸ்லிம்களின் வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதே கருத்தை வலியுறுத்தி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி டெரெக் ஓ பிரியனும் பேசினார். அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கூச்சலிட்டனர். அதனால், 15 நிமிடங்களுக்கு அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் தெரிவித்தார்.
அமளியால் அவை ஒத்திவைப்பு
மீண்டும் அவை அதன்பின்னரும், பல்வேறு பிரச்சனைகளை மையப்படுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து, வரும் 2ம் தேதிவரை ராஜ்யசபா ஒத்திவைக்கப்படுவதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.