ராஜ்யசபாவில் அமளி- டெரிக் ஓ பிரெயன் உட்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்- சபையில் இருந்து வெளியேற்ற உத்தரவு
டெல்லி: ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரெயன் உட்பட 8 எம்.பிக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் எம்.பி. டெரிக் ஓ பிரெயனை சபையில் இருந்து வெளியேற்றவும் சபைத் தலைவர் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார்.
ராஜ்யசபாவில் வேளாண் மசோதாக்களை நேற்று மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தாக்கல் செய்தார். இதற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
எம்.பிக்கள் கருத்து தெரிவித்த பின்னர் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்தார். மேலும் குரல் வாக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கைகளை சபை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மேற்கொண்டிருந்தார்.
விவசாய மசோதா.. வாக்கெடுப்பில் குளறுபடி? ராஜ்யசபா துணை சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
மசோதா கிழிப்பு- மைக் உடைப்பு
அப்போது சபைத் தலைவர் இருக்கையை நோக்கி திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரெயன் உள்ளிட்டோர் முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர். பின்னர் வேளாண் மசோதா நகல்களை கிழித்து எறிந்தனர். துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கையில் இருந்த மசோதா நகல்களும் கிழிக்கப்பட்டன. அப்போது சபைத் தலைவர் இருக்கையில் இருந்த மைக் உடைக்கப்பட்டது.
குரல் வாக்கெடுப்பு
இதனால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை கூடியதும் குரல் வாக்கெடுப்பு மூலம் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அறிவித்தார். இந்த அறிவிப்பு முறைகேடானது; குரல் வாக்கெடுப்பை துணைத் தலைவர் முறையாக நடத்தவில்லை என எதிர்க்கட்சி எம்.பிக்கள் புகார் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சிகள்- நம்பிக்கை இல்லா தீர்மானம்
அத்துடன் சபை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் இன்று காலை ராஜ்யசபா கூடியது சபை தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு, ராஜ்யசபாவில் நேற்று நடந்த அமளிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ராஜ்யசபாவுக்கு நேற்று கறுப்பு நாள். சில எம்.பிக்கள் துணைத் தலைவரை தாக்கவும் முயன்றுள்ளனர். அவரது கடமையைச் செய்யவிடாமலும் தடுத்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது என்றார்.
டெரிக் உட்பட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்
பின்னர் திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரெயனை சபையில் இருந்து வெளியேற்றவும் உத்தரவிட்டார் வெங்கையா நாயுடு. சஞ்சய் சிங், ராஜூ சாதவ், கேகே ராகேஷ், ரிபுன் போரா, டோலா சென், சையத் நசீர், இளமாறன் கரீம் ஆகிய எம்.பிக்களையும் ஒருவார காலத்துக்கு சஸ்பெண்ட் செய்தும் வெங்கையா நாயுடு உத்தரவிட்டார். மேலும் எதிர்க்கட்சிகளின் சபை துணைத் தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்தையும் வெங்கையா நாயுடு நிராகரித்தார். இந்த நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் முழக்கங்கள் எழுப்பியதால் அமளி தொடர்ந்தது. இதனையடுத்து சபை நடவடிக்கைகள் 4 முறை ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் சபை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடை 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட்-க்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி எம்.பிக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.