விவசாய சட்டம்: அரசுக்கு ட்ரீட்மென்ட்தான் சரி.. டிராக்டர் பேரணிக்கு ரெடியாகுங்க..ராகேஷ் திகாயத் ஆவேசம்
டெல்லி: மத்திய அரசு விவசாய சட்டங்களை திரும்பப் பெறுவதாக தெரியவில்லை.. இந்த அரசுக்கு சரியான சிகிச்சை தர வேண்டும் எனில் நாம் மீண்டும் டிராக்டர் பேரணிக்கு தயாராவோம் என்று டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் அழைப்பு விடுத்துள்ளார்.
மத்திய பாரதிய ஜனதா அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் 7 மாதங்களாக விவசாயிகளின் போராட்டம் தொடருகிறது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் சர்ச்சைக்குரிய விவசாய சட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சட்டங்கள் வாபஸ் இல்லை- மத்திய அரசு
மத்திய அரசுடனான பேச்சுவார்த்தைகளில் விவசாயிகளை பாதிக்கும் சட்டங்களை திரும்பப் பெறுவதாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இந்த சட்டங்களை திரும்பப் பெறவே முடியாது என்பதில் மத்திய பாஜக அரசு திட்டவட்டமாக உள்ளது.
அடுத்தடுத்து வழக்குகள்
அதேநேரத்தில் போராடும் விவசாயிகளோ, சட்டங்களை திரும்பப் பெற வைக்காமல் சொந்த ஊர் திரும்பப் போவதில்லை என்பதில் தீர்க்கமாக இருக்கின்றனர். இருந்த போதும் மத்திய அரசு டெல்லியில் போராடும் விவசாயிகளை கண்டுகொள்வதாக இல்லை. அத்துடன் போராடும் விவசாயிகள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போடப்பட்டும் வருகின்றன.
ஹரியானா அரசு தீவிரம்
குறிப்பாக பாஜக ஆளும் ஹரியானா மாநில அரசு நூற்றுக்கணக்கான விவசாயிகளுக்கு எதிராக ஏராளமான வழக்குகளை போட்டுள்ளது. இது விவசாயிகளின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் உத்தி என்பது குற்றச்சாட்டு. ஆனால் இதற்காக எங்கள் போராட்டம் ஓயப் போவதில்லை என்றும் விவசாய சங்கத் தலைவர்கள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.
ஜன. 26 டிராக்டர் பேரணி
ஏற்கனவே ஜனவரி 26-ந் தேதி டெல்லியில் குடியரசு தின விழாவின் போது தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களுடன் பிரமாண்ட பேரணி நடத்தப்பட்டது. ஆனால் விஷமிகள் இந்த போராட்டத்தில் ஊடுருவி செங்கோட்டையில் காலிஸ்தான் கொடி ஏற்றி போலீசாருடன் மோதலை ஏற்படுத்தினர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர்.மேலும் கண்ணீர்புகை குண்டுகளும் வீசப்பட்டன. இதில் திட்டமிட்டு வன்முறையை பரப்பியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும் டிராக்டர் பேரணி
இந்த நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்கங்களின் தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத் தமது ட்விட்டரில் புதிய போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், இந்த அரசு நமது கோரிக்கைகளை ஏற்கப் போவது இல்லை. இந்த அரசுக்கு சரியான சிகிச்சைதான் இப்போதைய தேவை. உங்களது டிராக்டர்களை தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். தொடர்ச்சியான போராட்டத்தின் மூலமே நாம் நமது நிலங்களைப் பாதுகாக்க முடியும். பொய் வழக்குகளால் நமது உரிமைக் குரலை அடக்கிவிட முடியாது என ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.