குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வருகிறது என நாங்க சொல்லவே இல்லையே... மோடிக்கு ராகேஷ் திகாயத் பதில்
டெல்லி: விவசாய விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வரும் என நாங்கள் எப்போதும் சொல்லவே இல்லை என்று டெல்லியில் போராடும் விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவராக ராகேஷ் திகாயத் கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் இன்று ஜனாதிபதி உரை மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, விவசாய விளைபொருட்களுகான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும். மண்டிகள் முறை நீடிக்கும்.
டெல்லியில் போராடும் விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் பிரதமர் மோடி. இதற்கு ராகேஷ் திகாயத் அளித்துள்ள பதில்:
குறைந்தபட்ச ஆதரவு விலை முடிவுக்கு வரும் என்று நாங்கள் சொல்லவே இல்லை. எங்களைப் பொறுத்தவரை குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய சட்டம் தேவை என்கிறோம்.
டெல்லியில் விவசாயிகள் நடத்துகிற போராட்டத்தை முதலில் பஞ்சாப் மாநிலத்தவரின் போராட்டம் என்றார்கள். பின்னர் ஜாட் ஜாதியினர் போராட்டம், சீக்கியர் போராட்டம் என முத்திரை குத்தினர். இது விவசாயிகள் போராட்டம். நாடு முழுவதும் இருக்கும் விவசாயிகளின் போராட்டம் இது.
பிரதமர் மோடி சொல்வது போல மத்திய அரசு விவாதிக்க, பேச்சுவார்த்தை நடத்த அழைத்தால் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். விவசாயிகள் குழுவுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தலாம். இவ்வாறு ராகேஷ் திகாயத் கூறினார்.