குறைந்தபட்ச ஆதார விலை: நல்ல முடிவு எடுங்க.. குடியரசு தின விழா வெகு தூரத்தில் இல்லை.. ராகேஷ் திகைத்
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் 6 கோரிக்கைகள் குறித்து நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் குடியரசு தின விழா அன்று டிராக்டர் பேரணி நடத்துவோம் என விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தி வந்தனர். இவர்களின் நியாயமான போராட்டத்திற்கு மத்திய அரசு இத்தனை மாதங்களாக பணியாமல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த வாரம் 19 ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெறுவதாக அறிவித்தார். அதே வேளையில் விவசாயிகள் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டார்.
எனினும் அதை முறைபடி நாடாளுமன்றத்தில் ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து நாளை நடைபெறும் நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா தாக்கல் செய்யப்படுகிறது. இந்த நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 6 கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
இதுகுறித்து ராகேஷ் திகைத் மும்பையில் ஆசாத் மைதானத்தில் கூறுகையில் குடியரசு தினவிழா பேரணிக்காக ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணய சட்டம் உள்பட 6 கோரிக்கைகள் குறித்து அரசு உடனடியாக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் சரியான முடிவு எடுக்க வேண்டும். குடியரசு தின விழா வெகுதூரத்தில் இல்லை. டெல்லியில் ஆயிரக்கணக்கான டிராக்டர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது எங்களை அரசாங்கம் காலிஸ்தானிகள் என்றும் நக்ஸலைட்டுகள் என்றும் அழைத்தன. போராட்டக்காரர்களை தீவிரவாதிகள் என்றும் விமர்சனம் செய்தன. ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருந்தோம். ஓராண்டுக்கு மேல் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பது எளிதானது அல்ல.
குறைந்த பட்ச ஆதார விலையை அமல்படுத்த மத்திய அரசு தயாராக இல்லை. விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு தானியங்களை வாங்கி அவற்றை சேமிக்க கார்பரேட் நிறுவனங்கள் மிக பெரிய குடோன்களை வாங்கியுள்ளன என்றார். கடந்த ஜனவரி 26ஆம் தேதி செங்கோட்டை நோக்கி விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியின் போது வன்முறை ஏற்பட்டது. போலீஸாரின் தடுப்புகள் தகர்த்தெறியப்பட்டன. செங்கோட்டையில் விவசாயிகளின் கொடிகளை ஏற்றியது குறிப்பிடத்தக்கது.