ராமர் கோவில் பூமி பூஜை, தேசிய ஒற்றுமையின் கொண்டாட்டம்.. பிரியங்கா அறிக்கை.. முதல் முறையாக ஓபன் ஆதரவு
டெல்லி: ஆகஸ்ட் 5ஆம் தேதியான நாளை, அயோத்தியில் ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் சீனியர் தலைவர் பிரியங்கா காந்தி, இந்த விழாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையிலான விழா இது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இந்த வாழ்த்து அறிக்கை என்பது அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பார்க்கப்படுகிறது.
ஏனெனில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக காங்கிரஸ் தலைமை அல்லது காந்தி குடும்பத்திலிருந்து வெளிப்படையான ஆதரவு குரலொன்று வெளியாகியுள்ளது இது தான் முதல் முறை.
82 வயசாய்ருச்சு.. 28 வருடமாக விடாமல்.. விரதமிருக்கும் பாட்டி.. எதற்காக.. ஆச்சரிய தேவி!
காங்கிரஸ் நிலைப்பாடு
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கர சேவகர்களால் இடிக்கப்பட்டது என்பதால், எப்போதுமே காங்கிரஸ் கட்சி, அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் விவகாரத்தில் வெளிப்படையான ஆதரவு கொடுத்தது கிடையாது. முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் காங்கிரஸ் மிகுந்த கவனம் செலுத்தும்.
ராமர் எல்லோருடனும் உள்ளார்
இந்த நிலையில்தான், பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையின் அம்சங்கள் என்ன என்பதை நீங்களே பாருங்கள்: எளிமை, வீரம், பொறுமை, தியாகம் மற்றும் கொண்டகொள்கையை முடிக்கக்கூடிய தீரம் ஆகியவை ராமபிரானின் குணாதிசயங்கள் ஆகும். நமது ஒவ்வொருவருக்குள்ளும் ராமர் இருக்கிறார், ஒவ்வொருவருடனும் ராமர் இருக்கிறார்.
ஒற்றுமை தினம்
ஆகஸ்ட் 5ம் தேதி ராமர் பிறந்த அயோத்தியில், கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெறுகிறது. ராமபிரானின் ஆசியுடன், இந்த விழா, தேசத்தின் ஒற்றுமை, நட்புறவு மற்றும் கலாச்சார ஒருங்கிணைப்புக்காண நிகழ்வாக மாறவேண்டும் என்று விரும்புகிறேன். உலகத்தின் நாகரீகத்தில் அழிக்கமுடியாத தடத்தை ராமாயணம் பதித்துள்ளது. இந்திய துணைக்கண்டத்தில் ராமாயணத்தின் கலாச்சார தாக்கம் அளப்பரியது.
அனைவர் நலன்
பல ஆண்டுகளாக இந்திய துணைக்கண்டத்தில் ராமபிரானின் குணாதிசயத்தை ஆதிக்கம் செலுத்துகிறது. நம் அனைவருக்கும் ராமபிரான் உரித்தானவர். ஒவ்வொருவருடைய நலத்தையும் நாடுபவர் ராமபிரான். இதனால்தான், அவர் 'மரியாத புருஷோத்தம்' என்று அழைக்கப்படுகிறார். இவ்வாறு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் பூமி பூஜை
அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து சுமார் ஓராண்டாகும் நிலையில் நாளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜை செய்து கட்டுமான பணிகளை துவக்கி வைக்கிறார். இந்த நிலையில் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள இந்த அறிக்கை என்பது முக்கியத்துவம் பெறுகிறது.