ராமர் கோயில் விவகாரத்தில் என்ன தீர்வு?.. மத்திய பாஜக அரசை நெருக்கும் இந்து அமைப்புகள்
டெல்லி : ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்குமாறு விஷ்வ இந்து பரிஷத் விடுத்துள்ள கோரிக்கையால் ஆளும் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நூற்றாண்டுகளை கடந்தும் தீர்வு காண முடியாத கட்டத்தில் உள்ள ராமர் கோயில் விவகாரம் பாஜகவுக்கு மீண்டும் மிகப்பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.
ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் இந்து அமைப்புகள் அதை தீவிரப்படுத்தி உள்ளன. அதற்காக, வரும் 9ம் தேதி முதல் அடுத்த கட்ட போராட்டத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
கைகோர்க்கும் அமைப்புகள்
டெல்லி ராம் லிலா மைதானத்தில் இந்த கோரிக்கையை முன் வைத்து அந்த நாளில் விஎச்பியுடன் மேலும் சில அமைப்புகள் கைகோர்த்து களமிறங்குகின்றன. வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அதற்கான உறுதியான முடிவை எடுக்கவில்லை என்றால் 2019ம் ஆண்டு ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி ஒன்று ஆகிய தேதிகளில் மிகப்பெரிய போராட்டத்தை முன் எடுக்க போவதாக விஎச்பி அறிவித்துள்ளது.
முக்கிய முடிவுகள்
5 லட்சம் பேர் பேரணியின் போது கூடுவார்கள் என்றும் விஎச்பி உறுதியாக தெரிவித்துள்ளது. போராட்ட அறிவிப்புகள் ஒரு பக்கம் தொடர்ந்து வெளி வந்தாலும், டிசம்பர் 9ம் தேதி போராட்டத்தை தொடர்ந்து பல முக்கிய முடிவுகளை விஎச்பி அறிவிக்கும் என்று தெரிகிறது. ஏனென்றால், நவம்பர் 25ம் தேதி முதலே இத்தகைய போராட்டங்களை அந்த அமைப்பு நடத்தி வருகிறது.
முக்கிய முடிவு எடுக்கப்படும்
துறவி பட்டாச்சாரியா
இது பற்றி கூறியுள்ள துறவி ராம் பட்டாச்சாரியா, வரும் 11ம் தேதிக்கு பிறகு அரசு மிக முக்கிய முடிவையும், தீர்வையும் எடுக்கும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் உறுதி தெரிவித்துள்ளார் என்றும் கூறியுள்ளார். இந்த பிரச்னையில், பாஜக அதிக ஆர்வம் காட்டாது என்பதற்கு உதாரணமாக, அண்மை காலமாக பேரணிகள் குறித்து கவலைப்படப் போவதில்லை என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
நெருக்கடி அதிகரிப்பு
ஆக மொத்தத்தில் பாஜகவுக்கு டிசம்பர் என்ற தேதியை விட, டிசம்பர் 9 முதல் 2019ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி வரை நெருக்கடியை சந்தித்தே ஆகும் என்பது மட்டும் திண்ணம்.