அங்கு கமலா ஹாரிஸ் துணை அதிபராகும்போது.. இங்கு சோனியா ஏன் பிரதமராக கூடாது?மத்திய அமைச்சர் பரபர பேச்சு
டெல்லி: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்கத் துணை அதிபராக ஆகும் போது, சோனியா காந்தி ஏன் இந்தியப் பிரதமர் ஆகக் கூடாது என்று மத்திய அமைச்சராக உள்ள ராம்தாஸ் அத்வாலே கேள்வி எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் பேசிய அவர், சோனியா காந்தி குறித்தும் காங்கிரஸ் குறித்தும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
இந்தியக் குடியரசுக் கட்சி தலைவரான இவர், 2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வென்ற பிறகு, சோனியா காந்தி பிரதமர் ஆகியிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில் ஷாக்.. ஊடுருவிய பாகிஸ்தான் பயங்கரவாதிகளை.. சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்
ஏன் பிரதமராகக் கூடாது
இது குறித்து ராம்தாஸ் அத்வாலே கூறுகையில், "2004 தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமைத்த சமயத்தில், சோனியா காந்தி பிரதமராக வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். சோனியாவின் வெளிநாட்டுப் பின்புலம் எந்த விதத்திலும் பிரச்சினையாக இருக்காது என்றே நான் கருதுகிறேன். இந்தியாவைப் பின்புலமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவில் துணை அதிபராக ஆகும்போது, சோனியா காந்தி ஏன் இந்தியப் பிரதமர் ஆகக் கூடாது. சோனியா காந்தி இந்தியாவின் குடிரியுமை பெற்றவர், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மனைவி, மக்களவையில் எம்பி-ஆகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு ஏன் அவர் பிரதமராக முடியாது?
சரத் பவார்
2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வென்ற பிறகு சோனியா காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றிருக்க வேண்டும். அப்படி சோனியா காந்திக்குப் பிரதமராக விரும்பவில்லை என்றால், அவர் மன்மோகன் சுங்கிற்குப் பதிலாக மூத்த அரசியல் தலைவரும் தேசியவாத தலைவருமான சரத் பவாரை பிரதமர் ஆக்கியிருக்க வேண்டும். சரத் பவார் மக்கள் செல்வாக்கு கொண்ட ஒரு தலைவர், அவரை பிரதமர் ஆக்கியிருந்தால், காங்கிரஸ் இப்போது இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்காது" என்று அவர் தெரிவித்தார்.
அமரீந்தர் சிங்
தொடர்ந்து பஞ்சாப் காங்கிரஸில் நடந்து வரும் உட்கட்சி குழப்பம் குறித்துப் பேசிய ராம்தாஸ் அத்வாலே, "பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் அவமானப்படுத்தப்பட்டுள்ளார். அவர் காங்கிரஸில் இருந்து விலக வேண்டும். அவர் பாஜக அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இணைய வேண்டும். அப்படி இணைந்தால் அடுத்த ஆண்டு பஞ்சாபில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்" என்று அவர் தெரிவித்தார்.
தேசியவாத காங்கிரஸ்
தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள சரத் பவார் ஒரு காலத்தில் காங்கிரஸில் இருந்தவர். 1990களின் இறுதியில் சோனியா காந்தியின் வெளிநாட்டுப் பின்புலம் குறித்து சரத் பவார் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார். இதன் காரணமாக அவர் கடந்த 1999ஆம் ஆண்டு காங்கிரசில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னரே அவர் தேசியவாத காங்கிரஸ் என்ற புது அமைப்பைத் தொடங்கினார். 2004இல் காங்கிரஸ் ஆட்சி அமைத்த போது, சோனியா காந்தி பிரதமராக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார். அவர் 2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்தியப் பிரதமராக இருந்தார்.