By poll results: ராஜஸ்தான் ராம்கார் தொகுதியில் காங்கிரஸ்.., ஹரியானா இடைத் தேர்தலில் பாஜக வெற்றி
டெல்லி: ஹரியானா மாநிலம் ஜிந்த் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ராம்கர் சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. ராம்கார் தொகுதியில் காங்கிரஸும், ஜிந்த் தொகுதியில் பாஜகவும் வெற்றி பெற்றுள்ளன.
இந்த இரு தொகுதிகளுக்கும் கடந்த 28ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து வாக்குப்பெட்டிகள் பத்திரமாக வைக்கப்பட்டன. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
ஜிந்த் தொகுதியில் பாஜக சார்பில் கிருஷ்ணா மித்தா, காங்கிரஸ் சார்பில் அக்கட்சி செய்தித்தொடர்பாளர், ரந்தீப் சர்ஜேவாலா மற்றும் ஜனநாயக் ஜனதா கட்சி சார்பில் களமிறங்கிய திக்விஜய் சவுத்தாலா ஆகியோர் நடுவே கடும் போட்டி நிலவியது.
வேட்பாளர்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தின் கீழ் வருகிறது ராம்கர். இங்கு காங்கிரஸ் சார்பில் சாபியா ஜுபைர் கான், பாஜக சார்பில் சுவந்த் சிங் ஆகியோர் நடுவே போட்டி நிலவியது. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர்சிங் மகன் ஜகத் சிங் இங்கு போட்டியிட்டார்.
முதலில் பின்னடைவு
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, ஜிந்த் சட்டசபை இடைத் தேர்தலில் ஜனநாயக் ஜனதா கட்சி முன்னிலை வகித்து வந்தது. திக்விஜய் சவுத்தாலா பாஜக வேட்பாளரை விட 1338 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்தார். இதனிடையே, 3வது சுற்று முடிவில், திக்விஜய் சவுத்தாலா, 11226 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் 9350 வாக்குகள், காங்கிரஸ் வேட்பாளர் 5813 வாக்குகள் பெற்றனர்.
பாஜக வேட்பாளர் முன்னிலை
ஆனால், 5ம் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது நிலைமை மாறிவிட்டது. பாஜக வேட்பாளர் 21052 வாக்குகள் பெற்றார். திக்விஜய் சவுத்தாலா 15315 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா 8813 வாக்குகள் பெற்றார். இறுதியில், பாஜக வேட்பாளர் கிருஷ்ணா மித்தா சுமார் 50,000 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். திக்விஜய் சவுத்தாலா 37,000 வாக்குகளையும், காங்கிரஸ் வேட்பாளர் ரந்தீப் சர்ஜேவாலா 22,000 வாக்குகளையும் பெற்றனர். எனவே இங்கு காங்கிரஸ் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது.
ராஜஸ்தானில் வெற்றி
ராம்கார் சட்டசபை இடைத் தேர்தலில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது. 16வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சாபியா ஜுபைர் கான் 63,906 வாக்குகள் பெற்றிருந்தார். பாஜக வேட்பாளர் சுவந்த் சிங் 47,254 வாக்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். இதனிடையே, 20வது சுற்று முடிவில், காங்கிரஸ் வேட்பாளர் சாபியா ஜுபைர் கான் 83,311 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் சுவந்த் சிங் 71,083 வாக்குகள் பெற்றார். சுமார் 12,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார்.