11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்றத்தில் நாளையே விசாரணை.. ஒபிஎஸ்க்கு சிக்கல்?
Recommended Video
டெல்லி: 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. திமுகவின் தங்கதமிழ்செல்வனின் கோரிக்கை மனுவை ஏற்று நாளை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், ஓ பன்னீர் செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் ஏற்பட்டது.
ஓ பன்னீர்செல்வத்தை ஆதரித்து எம்எல்ஏக்கள் பாண்டியராஜன், சண்முகநாதன், சின்னராஜ், மாணிக்கம், மனோரஞ்சிதம், ஆறுக்குட்டி, செம்மலை, மனோகரன், சரவணன், நட்ராஜ் ஆகியோர் இருந்தனர். இதனால் எடப்பாடி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக திமுக குற்றம்சாட்டியது.
மும்பைல ஏன் வருண ஜெபம் செய்தீங்க.. இப்ப பாருங்க வெள்ளக்காடாய்ருச்சு.. எச். ராஜாவை வாரும் நெட்டிசன்ஸ்
எடப்பாடிக்கு எதிராக
இதையடுத்து கடந்த 2017-ஆம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். அப்போது ஓபிஎஸ் உள்பட 11 எம்எல்ஏக்களும் எடப்பாடிக்கு எதிராகவே வாக்களித்தனர்.
எந்த நடவடிக்கை
அதிமுகவில் இருந்து கொண்டு கட்சிக்கு எதிராக செயல்பட்டது தொடர்பாக 11 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த புகார் மீது அவர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
தலைமை நீதிபதி
இதை எதிர்த்து திமுக கொறடா சக்கரபாணி மற்றும் டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் ஆகியோர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஹைகோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி இந்திரா முகர்ஜி முன்னிலையில் அந்த வழக்கு விசாரணை நடந்தது.
தலையிட முடியாது
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ந்தேதி அந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. 11 எம்.எல்.ஏ.க்கள் எதிர்த்து வாக்களித்தது தொடர்பான விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது, சபாநாயகர் முடிவே இறுதியானது என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு
அதோடு 11 பேர் தகுதி நீக்க வழக்கை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார். இதை எதிர்த்து திமுக கொறடா சக்கரபாணி, டிடிவி தினகரன் அணி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது.
நிலுவை
இந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி ஏ.கே.சிக்ரி சமீபத்தில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இதனால் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு விசாரணை நடைபெறாமல் நிலுவையில் இருந்தது.
தங்கதமிழ்ச் செல்வன்
இந்த நிலையில் அண்மையில் திமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன் உச்சநீதிமன்றத்தில் இன்று இது தொடர்பாக ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், 11 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு விசாரணை நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ளது. அதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தார்.
ரஞ்சன் கோகாய்
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் தங்க தமிழ்ச் செல்வனின் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்றும் இதற்காக புதிய அமர்வு விரைவில் அமைக்கப்படும் என்றும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் அறிவிப்பு
இந்நிலையில் திமுக தொடர்ந்த 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு நாளையே விசாரணைக்கு வரும் என உச்சநீதின்றம் அறிவித்துள்ளது. நாளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, பி,ஆர்.கவாய் அமர்வு முன்பு நாளை காலையில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எடப்பாடிக்கு எதிராக வாக்களித்த துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் அதிமுக எம்எல்ஏக்கள் 3பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பிய வழக்கும் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.