இளம் பெண்ணை தீ வைத்து எரித்த பலாத்கார குற்றவாளிகள்.. ஜாமீனில் வெளியே வந்து அட்டூழியம்
டெல்லி: பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான, 23 வயது இளம் பெண் ஒருவர், நீதிமன்றம் செல்லும் வழியில், தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் உன்னாவோ மாவட்டத்தில் நேற்று அந்த சம்பவம் நடந்தது. இளம் பெண்ணின் சொந்த கிராமத்திற்கு அருகே, 5 ஆண்கள் சேர்ந்து அந்த பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.
இதில் 2 ஆண்கள் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளிகளாம். அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தவர்கள். தீ பிடித்து எரிந்த நிலையில், சுமார் 1 கிலோமீட்டர் தூரம் அந்த பெண் அலறியபடி ஓடியுள்ளாார். இதை பார்த்த ஒருநபர், அவசர உதவி மையத்திற்கு தொலைபேசியில் அழைத்துள்ளார்.
இதையடுத்து விமானம் மூலம் அந்த பெண், டெல்லி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அந்த இளம் பெண் 90 சதவீத தீக்காயங்களுடன் கஷ்டப்படுவதாகவும், எனவே, சீரியஸ் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானாவில், கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புள்ள 4 குற்றவாளிகளும் இன்று என்கவுன்டர் செய்யப்பட்ட நிலையில், பலாத்காரத்திற்கு உள்ளான பெண் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
"அவர் எங்களை நோக்கி வருவதைக் கண்டோம், உதவிக்காக கத்தினார். நாங்கள் அதைப் பார்த்து பயந்துவிட்டோம்" என்று அந்த பெண்ணை நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறினார். லக்னோவில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு முதலில் அந்த இளம் பெண் கொண்டு செல்லப்பட்டார்.
மாலையில், அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். லக்னோவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் கொண்டு செல்வதற்காக மருத்துவமனையில் இருந்து விமான நிலையம் நடுவே கிரீன் பாதை உருவாக்கப்பட்டது.
அதாவது சிக்னல் இன்றி இளம் பெண், ஏர்போர்ட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.