ராணுவ வீரர்கள் கடிதமா? எங்களுக்கு எதுவும் வரவில்லையே.. குடியரசுத் தலைவர் அலுவலகம் மறுப்பு!
தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு படையை பற்றி பேசுவதற்கு எதிராக தங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.
Recommended Video
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் பாதுகாப்பு படையை பற்றி பேசுவதற்கு எதிராக தங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.
பாதுகாப்பு படையின் தாக்குதல்கள், சின்னங்கள், புகைப்படங்களை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த கூடாது என்று 150 முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு அவசர கடிதம் எழுதி இருந்தனர். ராணுவ வீரர்கள், ராணுவம் குறித்து பிரச்சாரத்தில் பேச தேர்தல் ஆணையம் தடை விதித்து இருந்தது.
இதையடுத்து முன்னாள் பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய குடியரசுத் தலைவருக்கு இப்படி அவசர கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
என்ன கடிதம்
முன்னாள் ராணுவ வீரர்கள் 150 பேர் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இந்த கடிதத்தை எழுதி உள்ளனர். இதில் முன்னாள் ராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகளும் அடக்கம். முன்னாள் ராணுவ தளபதிகளான சுனித் பிரான்சிஸ், ஷங்கர் ராய் சவுத்திரி, தீபக் கப்பூர், கடற்படை முன்னாள் தளபதிகள் லட்சுமி நாராயணன் ராமதாஸ், விஷ்ணு பகவத், சுரேஷ் மேத்தா, விமானப்படை முன்னாள் தளபதி என்சி சூரி ஆகியோர் இதில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.
கடும் கோபம்
இந்த கடிதத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ராணுவம் குறித்து பேசுவதற்கு முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதில், முறையற்ற, கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் ராணுவ நடவடிக்கைகளை அரசியல் காரணங்களுக்காக அரசியல் தலைவர்கள் பயன்படுத்துகிறார்கள். எல்லை தாண்டி நடத்திய தாக்குதல் குறித்து பிரச்சாரத்தில் பேசுகிறார்கள். மோடியின் சேனா என்று ராணுவத்தை குறிப்பிடுகிறார்கள். இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, என்றுள்ளனர்.
இல்லை
இந்த நிலையில் தங்களுக்கு அப்படி எந்த விதமான கடிதமும் வரவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது. எங்களுக்கு ராணுவத்திடம் இருந்து கடிதம் எதுவும் வரவில்லை. யார் மீதும் எங்களிடம் ராணுவம் இதுவரை எந்த வகையிலும் புகார் அளிக்கவில்லை என்று குடியரசுத் தலைவர் அலுவலகம் கூறியுள்ளது.
என்ன விளக்கம்
அதேபோல் விமானப்படை முன்னாள் தளபதி என்சி சூரி, ராணுவ தளபதி சுனித் பிரான்சிஸ் ஆகியோரும் இந்த செய்தியை மறுத்து இருக்கிறார்கள். தாங்கள் இந்த கடிதத்தை எழுதவில்லை. நாங்கள் அப்படி எந்த விதமான கடிதத்திலும் கையெழுத்து போடவில்லை என்று அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதனால் இந்த கடித விஷயத்தில் பெரிய குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.