வெள்ளையனே வெளியேறு என்பதை போல.. அசுத்தமே வெளியேறு என கோஷமிடுவோம்.. மாணவர்கள் மத்தியில் மோடி பேச்சு
டெல்லி: தேசிய துப்புரவு மையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளிடம் உரையாடினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று, மகாத்மா காந்தி நினைவிடம் அமைந்துள்ள டெல்லி, ராஜ்காட்டில் தேசிய சுகாதார மையத்தை திறந்து வைத்தார்.
அப்போது தேசிய துப்புரவு மையத்தில் 'ஸ்வச் பாரத் மிஷன்' அடிப்படையிலான குறும்படத்தையும் பிரதமர் மோடி பார்த்தார். தேசிய துப்புரவு மையம் என்பது 'ஸ்வச் பாரத் மிஷனை' மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட மையமாகும்.
டேபிள் டாப்.. நீங்களே படத்தை பாருங்க.. இப்படி ரன்வே இருந்தால் எப்படி விமானத்தை நிறுத்த முடியும்?
மினி இந்தியா
2017ம் ஆண்டு, இப்படி ஒரு மையத்தை துவங்க உள்ளதாக மோடி அறிவித்திருந்தார். தற்போது அது மக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இதில், பல மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி, மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில்,
இங்கு நான் ஒரு மினி இந்தியாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன். கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் மாணவர்களின் பங்களிப்பு சிறப்பானது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நீங்கள் அனைவரும் முகக் கவசத்தை அணிந்துகொண்டு சமூக தொலைதூர விதிமுறைகளைப் பின்பற்றுகிறீர்கள் என்பதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
வரலாற்று சிறப்பு
இன்று மிகவும் வரலாற்று நாள். இன்றைய தேதி, அதாவது ஆகஸ்ட் 8 நாட்டின் சுதந்திரத்திற்கு ஒரு பெரிய பங்களிப்பாகும். இந்த நாளில், 1942 இல், காந்தியின் தலைமையில் சுதந்திரத்திற்கான ஒரு பெரிய வெகுஜன இயக்கம் தொடங்கியது.
அசுத்தமே வெளியேறு
சுதந்திர போராட்ட காலத்தில், வெள்ளையனே வெளியேறு என்று கோஷமிட்டோம். அதேபோல அசுத்தமே வெளியேறு என்று இப்போது கோஷமிட தேவை எழுந்துள்ளது. கொரோனாவுக்கு எதிராக அனைவரும் இணைந்து போரிட வேண்டும். காற்று மாசுக்கு எதிராகவும், மாணவர்கள் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.
ஆகஸ்ட் புரட்சி
இந்தியாவிலிருந்து வெள்ளையர்களை எதிர்த்து நடைபெற்ற அறவழிப் போராட்டம் 1942ம் ஆண்டு தீவிரம் அடைந்தது. ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படும் இந்த இயக்கத்தின் முதற்கட்ட பணி, ஜூலை 1942ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் செயற்குழுவில் தொடங்கியது.
வெள்ளையனே வெளியேறு
பிறகு, ஆகஸ்ட் 8ம் தேதி பம்பாயில் (தற்போதைய மும்பை) இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை (quit india movement) நாடு முழுவதும் தீவிரப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் பேசிய மகாத்மா காந்தி, செய் அல்லது செத்து மடி என்ற கோஷத்தை முன்வைத்தார். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதன்பிறகு 5 வருடங்களில், அதாவது 1947ம் ஆண்டு, ஆகஸ்ட் 15ம் தேதி, வெள்ளையர்கள், இந்த நாட்டை விட்டு வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது.