ரவிக்கு எம்பூட்டு அறிவு.. யூடியூப் வீடியோ பார்த்து கள்ள நோட்டை கச்சிதமா அடிச்சாரு.. ஆனால் பாருங்க
டெல்லி: டெல்லியை சேர்ந்த ரவி சந்துக்கு பணக்காரன் ஆக வேண்டும் என தீராத ஆசை ஏற்பட்டு இருக்கிறது.ஆனால் அவருக்கு உழைக்க ஆசையில்லை. கலர்கலராக கள்ள நோட்டு அடிச்சு கலர்புல்லாக வாழ ஆசைப்பட்டார். ஆனால் அவர் தற்போது கம்பிக்கு பின்னாடி அமர்ந்து, இப்படியாகிடுச்சே என யோசித்துக்கொண்டு இருக்கிறார்.
டெல்லியைச் சேர்ந்த 27 வது நபர் ரவி சந்த். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாதான் இவருக்கு சொந்த ஊர். ஆனால் தெற்கு டெல்லியில் உள்ள விஷ்ணுகார்டன் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இவருக்கு பணக்காரன் ஆக வேண்டும் என தீராத ஆசை இருந்துள்ளார். ஆனால் அதற்காக ரவி செய்த காரியம் தான் அதிர்ச்சி ரகம். வேலையே செய்யாமல் சும்மா இருந்தபடி பணக்காரன் ஆக வேண்டும் என்றால் ஒன்று கொள்ளை அடிக்க வேண்டும் இல்லாவிட்டால், கள்ளநோட்டுதான் அடிக்கணும் என பேச்சுவாக்கில் சொல்வார்களே,இதை பற்றிதான் ரவி யோசித்துள்ளார்.
கள்ள நோட்டுகள்
அவருக்கு கொள்ளை அடிப்பதை விட கள்ளநோட்டு அடிப்பது ஈஸியாக பட்டுள்ளது. உடனே பட்டென்று அதற்கான வேலைகளில் இறங்கினார். 500 ரூபாய் 2000 நோட்டுகளை சாதாரண பேப்பரிலேயே கலர்புல்லாக பிரிண்ட் அவுட் எடுத்து அதை அப்படியே யாரும் சந்தேகம் வராத அளவுக்கு ஒரிஜினல் நோட்டு இருப்பதை போல் சரியாக வெட்டி உள்ளார். நோட்டை பார்த்தால் கள்ளநோட்டு என யாரும் சட்டென கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இருந்துள்ளது.
வாரசந்தைகளில்
கள்ள நோட்டை பார்த்து பூரிப்பு அடைந்த ரவி, மாலை நேரங்களில் கூட்டம் அதிமாக இருக்கும் ஒயின்ஷாப்புகளில் கள்ளநோட்டை கொடுத்து மாற்றி உள்ளார். அவர்களும் சரக்கு பாட்டிலோடு மீதி சில்லரையும் கொடுத்துள்ளனர். இதனால் சந்தோஷப்பட்ட ரவி,அப்படியே வாரச்சந்தைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் கடைகளில் பொருட்களை வாங்கம் சாக்கில் மாற்றி உள்ளார். அங்கும் சக்சஸ்.
சுகபோக வாழ்க்கை
இதனால் உற்சாகம் அடைந்த ரவி லட்சக்கணக்கில் ரூ.500, ரூ.200, ரூ.2000 நோட்டுகளை அச்சடித்து வைத்து, விநியோகித்து சுகபோகமாக இருந்துள்ளார். முன்னதாக பஞ்சாப் போலீசார் இவரை கள்ளநோட்டு அடித்த வழக்கில் கைது செய்ததாலேயே இவர் டெல்லிக்கு வந்து மிககவனமாக கள்ளநோட்டு பிசினஸில் ஈடுபட்டுள்ளார்.
தூக்கியது டெல்லி போலீஸ்
இதற்கிடையே டெல்லி திலக்நகர் போலீசார் வார சந்தைகளில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டு வரும் டிப்டாப் ஆசாமி யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தனர். இவர்கள் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரவிதான் கள்ளநோட்டுகளை புழகத்தில் விடுகிறார் என்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரது இல்லத்துக்கு சென்ற போலீசார் அங்கு 2 ஆயிரம் நோட்டுகள் 64 . 500 நோட்டுகள் 17, 200 நோட்டுகள் 8, இருப்பதை கண்டுபிடித்தனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் ஆகும். இதை கைப்ற்றிய போலீசார் ரவி சந்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.