தமிழ்நாட்டுக்கு இன்று துக்க நாள்.. ரவிக்குமார் எம்பி வேதனை டுவிட்.. ஏன் தெரியுமா?
டெல்லி: இன்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அணை பாதுகாப்பு மசோதா சுட்டிக்காட்டி இன்று தமிழ்நாட்டுக்கு துக்கநாள் என்று விசிக எம்பி ரவிக்குமார் வேதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு அணை பாதுகாப்பு சட்டத்தை உருவாக்கி உள்ளது. சட்டத்தின்படி அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும். இச்சட்டப்படி மாநிலங்கள் அணைகளை பாதுக்க தனியாக ஆணையத்தை உருவாக்க வேண்டும்.
ஒரு மாநிலத்திற்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய ஆணையம் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் கேரளாவில் உள்ள தமிழகத்துக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையின் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது. இதேபோல் தமிழகத்தின் 4 அணைகளின் உரிமை பறிபோகும். அணை பாதுகாப்பு சட்டம் நிறைவேறினால் இந்தியாவின் அனைத்து அணைகளின் உரிமை முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு சென்றுவிடும். இந்த மசோதாவிற்கு திமுக மற்றும் அதிமுக இரண்டுமே ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றன. இந்த சூழலில் தான் இன்று லோக்சபாவில் அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
தமிழ்நாட்டுக்கு துக்கநாள்: இன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அணை பாதுகாப்பு மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்குமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் கோருகிறேன்.
— Dr Ravikumar M P (@WriterRavikumar) July 29, 2019
இதை பற்றி குறிப்பிட்டு தான் விசிக எம்பி ரவிக்குமார் டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார் அவர் தனது பதிவில், "தமிழ்நாட்டுக்கு துக்கநாள் என்றும் இன்று லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள அணை பாதுகாப்பு மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்க்குமாறு தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து அரசியல் கட்சிகளையும் கோருகிறேன்" என கூறியுள்ளார்.