ஆர்பிஐ கவர்னர் ஓர் ஊழல்வாதி.. குருமூர்த்தி நியமனம் தவறு.. குற்றச்சாட்டுகளை அடுக்கும் சு.சாமி!
ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் ஒரு ஊழல்வாதி என்று சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் ஒரு ஊழல்வாதி என்று பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து ரிசர்வ் வங்கி ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டார். இவரது நியமனத்தில் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சக்திகாந்த தாஸுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். பெங்களூரில் நடந்த ஸ்கூல் ஆப் பிசினஸ் கல்லூரி விழாவில் பேசிய சுப்பிரமணிய சுவாமி ஆர்பிஐ குறித்து பல விவரங்களை தெரிவித்தார்.
ஊழல்வாதி
சுப்பிரமணிய சுவாமி தனது பேச்சில், ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டு இருக்கும் சக்திகாந்த தாஸ் ஒரு ஊழல்வாதி. அவரது நியமனம் தவறு. அவருக்கு எதிராக நிறைய குற்றச்சாட்டுகள் உள்ளது. நான் இருக்கும் போது சக்திகாந்த தாஸ் பொருளாதாரத்துறை அமைச்சகத்தில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவரை போய் ஆர்பிஐ கவர்னராக நியமித்துள்ளனர்.
சென்னையில் சிதம்பரம்
அவர் ப.சிதம்பரத்தின் செல்லப்பிள்ளை. ப.சிதம்பரத்தின் ஊழல்களுக்கு சக்திகாந்த தாஸ் துணை போய் இருந்தார். சில வழக்குகளில் இருந்து ப.சிதம்பரத்தை வெளியே கொண்டு வர சக்திகாந்த தாஸ் உதவி செய்ய முயற்சி செய்தார். சென்னையில் இருந்த போது சக்திகாந்த தாஸ் பல ஊழல்களை செய்துள்ளார்.
குருமூர்த்தி ஏன்
அதேபோல் எஸ்.குருமூர்த்தி ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டதற்கும் சுப்பிரமணிய சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எஸ்.குருமூர்த்தி ஆர்பிஐ அமைப்பில் இருக்க தகுதி வாய்ந்தவர் கிடையாது. அவரை ஆர்பிஐ இயக்குநராக்கியது பெரிய குற்றம் என்று கூறியுள்ளார்.
யார் வர வேண்டும்
மேலும் ஆர்பிஐ இயக்குனராக யார் வர வேண்டும் என்றும் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார். அதில் ''முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினரான ஐஐஎம் பெங்களூரில் பேராசிரியராக இருக்கும் ஆர். வைத்தியநாதன்தான் ஆர்பிஐ கவர்னர் ஆக வேண்டும். அவர் நல்ல புத்திசாலி, அதேபோல் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர். அவர் நம்முடைய ஆள், அதனால் அவர்தான் ஆர்பிஐ கவர்னராக வேண்டும்'' என்று சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.