மத்திய அரசுடன் மோதல்: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா!
ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
டெல்லி: ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடந்த சில மாதங்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக ரிசர்வ் ஊழியர்கள், துணை கவர்னர் கூட புகார்களை அடுக்கினார். இதை தொடர்ந்து தற்போது உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்துள்ளார்.
கடும் விமர்சனம்
மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி ரிசர்வ் வங்கிக்கு எதிராக பலமுறை கடுமையான விமர்சனங்களை வைத்து இருந்தார். ரிசர்வ் வங்கி வழங்கும் கடன் தொடர்பாக பலமுறை மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிய காரணம் மத்திய அரசு என்று ரிசர்வ் வங்கியும், ரிசர்வ் வங்கிதான் என்று மத்திய அரசும் குற்றச்சாட்டு வைத்தது.
கடன் பிரச்சனை
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் உர்ஜித் பட்டேல் மத்திய அரசுடனான மோதல் குறித்து தன்னுடைய ராஜினாமாவில் குறிப்பிடவில்லை.
பணம் கேட்ட பிரச்சனை
அதேபோல் மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க இருந்தது. நிதி பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் அரசுக்கு உதவ ஆர்பிஐ வைத்திருக்கும் தொகையான 9.6 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 3.6 கோடி ரூபாயை மத்திய அரசு கேட்க இருந்தது. இதில் அரசுக்கும் ஆர்பிஐக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டது.
ராஜினாமா செய்தார்
இந்த நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 2016 செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி கவர்னராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டார். ரிசர்வ் வங்கியின் 24வது ஆளுநராக உர்ஜித் பட்டேல் நியமிக்கப்பட்டு இருந்தார். அடுத்த ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி வரை இவருக்கு பதவிக்காலம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன காரணம்
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக உர்ஜித் பட்டேல் அறிவித்து இருக்கிறார். எங்கும் மத்திய அரசுடன் மோதல் போக்கால் பதவி விலகுவதாக கூறவில்லை. அதேபோல் மத்திய அரசுக்கு எதிராகவும் எந்த விமர்சனமும் வைக்கவில்லை.
படுமோசம்
சுதந்திர இந்தியாவில் முதல்முறை ஒரு ஆர்பிஐ ஆளுநர் தனது பதவிக்காலம் முடியும் முன் பதவி விலகுவதாக கூறப்படுகிறது. இதனால் தற்போது இந்திய ரூபாய் மதிப்பு வேகமாக சரிய தொடங்கி இருக்கிறது. பங்கு சந்தையிலும் நாளை பெரிய சரிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.