பணமதிப்பிழப்பிற்கு பின் திடீர் வெளிநாட்டு முதலீடு.. சிக்கலில் தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் மகன்!
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவலை வெளிநாட்டு பண முதலீட்டு மோசடி வழக்கில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
டெல்லி: இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவலை வெளிநாட்டு பண முதலீட்டு மோசடி வழக்கில் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இந்தியாவில் புதிதாக பல ஏழைகள் உருவானார்கள். அதே சமயம் பல பேர் திடீர் என்று கோடீஸ்வரர் ஆனார்கள். இதை வைத்து ஆன்லைன் வர்த்தகம் என பல வகையில் பலர் கோடிகளில் சம்பாதித்தனர்.
எப்படியோ இதில் சில பாஜகவை சேர்ந்தவர்களோ, பாஜகவிற்கு நெருக்கமானவர்களோ பெரிய வகையில் பலன் அடைந்தனர். அப்படி ஒரு வழக்கில்தான் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல் சிக்கி இருக்கிறார்.
என்ன செய்தார்
2016 நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டது. இதற்கு சரியாக எட்டு நாட்களுக்கு பின் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல், பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருக்கும் கேமேன் தீவில் பல கோடிகளில் திடீரென்று முதலீடு செய்தார். 4,000கோடி ரூபாய்க்கும் அதிகமாக இவர் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
கேமேன் தீவு
கேமேன் தீவு என்பது உலகில் இருக்கும் ''வரி சொர்க்க'' பகுதிகளில் ஒன்றாகும். இது போன்ற பகுதிகளில் வரி மிக மிக குறைவாக இருக்கும். சில இடங்களில் சுத்தமாக வரி இருக்காது. இங்கு பணம் முதலீடு செய்வது தவறான விஷயம் கிடையாது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் இங்கு எப்போதும் இல்லாதா அளவிற்கு மிக மிக அதிக அளவில் இந்தியாவில் இருந்து பணம் முதலீடு செய்யப்பட்டு இருக்கிறது .
எப்படி செய்தார்
காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் மூத்த உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ்தான் இந்த குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவர் இது தொடர்பாக சில ஆவணங்களை வெளியிட்டுள்ளார். அதில், 2000 முதல் 2016 டிசம்பர் வரை 3500 கோடி ரூபாய்க்குத்தான் கேமேன் தீவில் இந்தியாவில் இருந்து முதலீடு நிகழ்ந்துள்ளது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் ஒரே வருடத்தில் 8300 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யப்பட்டது எப்படி, என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மிக மோசம்
அதேபோல் பல கோடிகளை முதலீடு செய்யும் அளவிற்கு அஜித் தோவலின் மகன் விவேக் தோவலுக்கு பணம் எங்கிருந்து வந்தது. இதை ஆர்பிஐ உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பதே பெரிய ஊழல் என்று காங்கிரஸ் ஏற்கனவே குற்றச்சாட்டு வைத்து இருந்தது. இப்போது இது தொடர்பாக புதிய பரபரப்பு குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது.