ஆர்பிஐ vs மத்திய அரசு.. முதல்முறையாக கருத்து தெரிவித்த உர்ஜித் பட்டேல்.. பரபர அறிக்கை!
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையில் முதல்முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிலவி வரும் பிரச்சனையில் முதல்முறையாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இவர் தெரிவித்த கருத்து மத்திய அரசுக்கும், ஆர்பிஐக்கும் இடையில் மீண்டும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், இந்த பிரச்சனை தீர்ந்தபாடில்லை.
இந்த நிலையில் முதல்முறையாக இந்த பிரச்சனை தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற குழுவில் அவர் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
பிரச்சனைக்கு பொதுவான காரணம்
ஆர்பிஐ மற்றும் மத்திய அரசு இடையே நிலவும் பிரச்னைக்கு சில பொதுவான காரணங்கள் இருக்கிறது. இது வெளிப்படையாக தெரியும் காரணங்கள் ஆகும்.
1. மத்திய அரசின் பொருளாதார கொள்கை காரணமாக பணமதிப்பு குறைவது.
2. எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட மத்திய - ஆர்பிஐ மோதல்.
3. யாருக்கு அதிக அதிகாரம் என்பதில் ஆர்பிஐ - மத்திய அரசு இடையே கருத்து வேறுபாடு.
4. இரு பிரிவிலும் இருக்கும் முக்கிய தலைகள் இடையே நடந்த வார்த்தை போர், ஆகியவைதான் இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்தது.
ஆனால் உண்மை என்ன
ஆனால் இதெல்லாம் போக இன்னொரு முக்கியமான காரணமும் இந்த பிரச்சனைக்கு பின் இருக்கிறது. மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க இருந்தது. நிதி பற்றாக்குறை ஏற்படும் சமயங்களில் அரசுக்கு உதவ ஆர்பிஐ வைத்திருக்கும் தொகையான 9.6 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 3.6 கோடி ரூபாயை மத்திய அரசு கேட்க இருந்தது.
தொடங்கியது
ஆர்பிஐ, அவர்கள் வைத்திருக்க வேண்டிய தொகையை விட அதிக தொகையை சேர்த்து வைத்துள்ளது என்று கூறி மத்திய அரசு பணம் கேட்டது. ஆனால் ஆர்பிஐ இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இப்படி அவசர கால நிதியை கேட்பது பெரிய பொருளாதார சீர்குலைவிற்கு வழிவகுக்கும் என்று கூறி மத்திய அரசின் கோரிக்கையை ஆர்பிஐ நிராகரித்தது. அதேபோல் இந்த பணத்தை 5 மாநில தேர்தலில் பயன்படுத்த மத்திய அரசு நினைக்கிறது என்று காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்தது.
சமரசம்
ஆர்பிஐயும், தங்களிடம் சரியான அளவுதான் பணம் கையிருப்பு உள்ளது என்று கூறியுள்ளது. இதனால் அரசுக்கும் ஆர்பிஐக்கு இடையே தொடர்ந்து இரண்டு பேச்சுவார்த்தைகள் நடந்தது. கடைசியாக நடந்த பேச்சுவார்த்தையில், மத்திய அரசு ஆர்பிஐயிடம் பணம் கேட்காது, ஆனால் இரண்டு அமைப்பும் சேர்ந்து விவாதம் செய்து முக்கியமான தேவை என்றால் அந்த பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியது. அதாவது இரண்டு குழுவின் உறுப்பினர்களும் ஒப்புக்கொண்டால் ஆர்பிஐ பணம் அளிக்க வேண்டும் என்று அரசு கூறியது.
அறிக்கை
இந்த நிலையில் முதல்முறையாக இந்த பிரச்சனை தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நாடாளுமன்ற குழுவில் அவர் தனது அறிக்கையை சமர்பித்துள்ளார். அதில் ஆர்பிஐ மத்திய அரசுக்கு இந்த பணத்தை கொடுக்க முடியாது. ஏனென்றால், சர்வதேச பொருளாதாரம் சரியும் போது இந்த பணம் தேவைப்படும், அதனால் மத்திய அரசு இப்போது எந்த அவசர தேவைக்கு பணம் கேட்டாலும் கொடுக்க முடியாது என்றுள்ளார். இதனால் ஆர்பிஐக்கும், மத்திய அரசுக்கும் மீண்டும் பிரச்சனை முற்றியுள்ளது.