ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களுக்கு உரிமைகள் கிடைத்துள்ளன: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
டெல்லி: சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைத்துவிட்டன என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 73-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை:
நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளை நாம் நிறைவு செய்துள்ளோம். இன்னும் சில வாரங்களில் அக்டோபர் 2-ந் தேதி தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.
சீக்கியர்களின் புனித குருவான குருநானக் தேவ்ஜியின் 550-வது பிறந்த நாளும் இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. ஜம்மு காஷ்மீரில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் காஷ்மீர், லடாக் மக்களுக்கு ஏராளமான பயன்களைத் தரும்.
நாட்டின் பிற மாநில மக்கள் அனுபவிக்கும் அத்தனை உரிமைகளையும் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் மக்களுக்கும் இனி கிடைக்கும். அண்மையில் 17-வது லோக்சபா தேர்தலை நாம் எதிர்கொண்டோம்.
மிகப் பெரிய ஜனநாயக கடமையை ஆற்றிய வகையில் பொதுமக்களுக்கு என் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
இவ்வாறு ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.